காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: தனது கணவர், திருமணத்தை மீறி ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக, முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், கணொலி வாயிலாக ஆஜராக விஜய்-சங்கீதாவுக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
முதலில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கின் பின்னணி
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யின் மனைவி சங்கீதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கான காரணங்களாக அவர் பட்டியலிட்டதுதான் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது விஜய் திருமணத்தை மீறி நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும், விஜய் அதை மதிக்காமல் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார் என்றும் சங்கீதா தனது 12 பக்க மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, வீட்டில் தன்னுடைய அடிப்படை உரிமைகள் மற்றும் நிதி தொடர்பான சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், கடந்த ஏப்.20ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இருவரும் ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், காணொலி வாயிலாக ஆஜராவதாகவும் சொல்லப்பட்டிருந்தது. அதேபோல சங்கீதாவும் காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தார். விசாரணையில் இரு தரப்பினரின் கோரிக்கையை கேட்ட நீதிபதி அடுத்தக்கட்ட வழக்கு விசாரணையை ஜூன்.15ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதனையடுத்து இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. மறுபுறம் லண்டனில் வசித்து வந்திருந்த சங்கீதா, தற்போது சென்னை திரும்பியிருப்பதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்திருப்பதால் இந்த வழக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications