“E10 பெட்ரோல் தான் டூவீலர்களுக்கு நல்லது..” E20 சர்ச்சைக்கு நடுவே விவாதமாகும் நிதி ஆயோக் அறிக்கை
டெல்லி: இந்தியாவில் E20 பெட்ரோல் மட்டுமே இப்போது நாடு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. அதன் தாக்கம் குறித்து விவாதம் நீடித்து வரும் நிலையில், 2021ஆம் ஆண்டிலேயே இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம், E10 பெட்ரோல் விநியோகத்தைத் தொடர வேண்டும் என்று நிதி ஆயோக்கிடம் வலியுறுத்தியிருந்தது தற்போது கவனம் பெற்றுள்ளது.
நாடு முழுக்க இப்போது E20 பெட்ரோல் குறித்தே விவாதம் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் Roadmap for Ethanol Blending in India: 2020-25 என்ற நிதி ஆயோக் அறிக்கை இப்போது இடம்பெற்றுள்ளது. எத்தனால் கலவை பெட்ரோலுக்கு இந்தியா மாறும் திட்டத்தின்போது, பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்கப்பட்ட நிலையில் நிதி ஆயோக் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருந்தது.

E20 பெட்ரோல்
அதில் E20 பெட்ரோல் விற்பனை தொடங்கப்பட்டாலும், E10 பெட்ரோலை தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. ஏற்கனவே சாலையில் ஓடும் லட்சக்கணக்கான வாகனங்கள் E10 பெட்ரோலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், E10ஐ முழுமையாக நீக்கினால் அவற்றின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்தது.
E20க்கு ஏற்ற வகையில் பழைய வாகனங்களை மாற்றியமைப்பது மிகவும் சிக்கலான மற்றும் நடைமுறையில் சாத்தியமற்ற பணியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்தியாவில் ஏராளமான மாடல்கள் மற்றும் பல்வேறு எரிபொருள் அமைப்புகள் பயன்பாட்டில் உள்ளதால், ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக புதிய உதிரி பாகங்களை உருவாக்கிப் பொருத்துவது மிக பெரிய சவாலாக இருக்கும் என தெரிவித்தது.
E10 பெட்ரோல்
E10 கிடைக்காமல் E20 மட்டுமே விற்பனை செய்யப்பட்டால்.. எரிபொருள் குழாய்கள் மற்றும் ரப்பர் பாகங்கள் சேதமடையலாம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர எரிபொருள் கசிவு ஏற்படும் அபாயம், வாகனத்தின் மைலேஜ் குறைவு, இன்ஜின் செயல்திறன் பாதிப்பு, குறிப்பாக டூவீலர் ஓட்டும்போது அதன் போர்ஸ் தெரியாமல் போகலாம் என்று நிதி ஆயோக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எத்தனாலின் கலோரிக் மதிப்பு பெட்ரோலைவிட குறைவாக இருப்பதால், E20 பெட்ரோலை பயன்படுத்தும்போது சுமார் 6% வரை எரிபொருள் சிக்கனம் குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. புதிய தலைமுறை வாகனங்களில் இன்ஜின் மாற்றங்கள் மூலம் இந்த இழப்பை ஓரளவு ஈடுசெய்ய முடியும் என்றாலும், தற்போது சாலையில் இயங்கும் பழைய வாகனங்களுக்கு இது முக்கிய பிரச்சினையாக இருக்கும் என கூறியது.
எதிர்ப்பு
E12, E15 போன்ற எத்தனால் கலவை பெட்ரோலை கொண்டு வருவதை நிதி ஆயோக் குழு எதிர்த்தது. குறுகிய காலத்தில் பல்வேறு எரிபொருள் தரங்களுக்கு மாறுவது வாடிக்கையாளர்களுக்கும், வாகன உற்பத்தியாளர்களுக்கும் கூடுதல் சிக்கலை உருவாக்கும் என்று தெரிவித்தது. நிதி ஆயோக்கின் இறுதி அறிக்கையிலும், E20க்கு மாறும் நடைமுறை முடியும் வரை நாடு முழுவதும் E10 பெட்ரோல் கிடைக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.
பெரிய பாதிப்பு இல்லை
E20 பயன்படுத்தும்போது 6% வரை மைலேஜ் குறையலாம் என்று கண்டறியப்பட்டாலும், இன்ஜின் செயலிழப்பு, அதிக தேய்மானம் அல்லது பெரிய அளவிலான தொழில்நுட்ப கோளாறுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல E20 பெட்ரோல் வாகன இன்ஜின்களுக்கு பெருமளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளை மத்திய அரசு அண்மையில் மறுத்தது. விரிவான சோதனைகள் நடத்திய பிறகே E20 அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இன்ஜின் சேதம் தொடர்பாக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த சூழலில் தான் 2021ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கை, E20 பாதுகாப்பானது என்றாலும் பழைய வாகனங்களைக் கருத்தில் கொண்டு E10 பெட்ரோலை தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது..












Click it and Unblock the Notifications