தேனி கூலித்தொழிலாளி வீட்டில் ₹17,059 கரண்ட் பில்.. ஒரு ஏசியால் இவ்வளவு வருமா? மின் மீட்டரா காரணம்?
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு திடீரென 17,059 ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவணை முறையில் புதிதாக வாங்கிய ஏசியால் தான் இவ்வளவு தொகை வந்துள்ளது என மின்வாரிய அதிகாரிகள் கைவிரித்தாலும், தங்களது பழைய மின் மீட்டரின் கோளாறு தான் இதற்குக் காரணம் என அந்த குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே தேனியில் என்ன நடந்தது?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

பாலமுருகன் நாளெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்தால், இவருக்கு மாதம் கையில் கிடைக்கும் வருமானமே 10 முதல் 12 ஆயிரம் தான்.. இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு, தன்னுடைய குடும்பத்தை நகர்த்தி வருகிறார் பாலமுருகன்.
தேனி கூலித்தொழிலாளி பாலமுருகன்
கடந்த 5 வருடங்களாக இவரது வீட்டிற்கு வரும் மின்சார கட்டணம் வெறும் 300 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 800 அல்லது 900 ரூபாய்க்குள் மட்டுமே வந்துள்ளது. பாலமுருகனும் தன்னால் முடிந்த தொகையை முறைப்படி கட்டி வந்துள்ளார்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், குடும்பத்தினரின் வசதிக்காக ஒரு ஏசியை தவணை முறையில் வாங்கியுள்ளார் பாலமுருகன். ஏசி போட்டால் எப்படியும் கொஞ்சம் கூடுதலாக கட்டணம் வரும் என்று எதிர்பார்த்தார். அதன்படியே கடந்த ஏப்ரல் மாதம் 2,500 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது.
ஆனால் இந்த ஜூன் மாத கணக்கீட்டின் போது வந்த மின்கட்டண ரசீதை பார்த்த பாலமுருகன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த முறை அவர்களுக்கு வந்த கரண்ட் பில் மொத்தம் 17,059 ரூபாய்.
பாலமுருகன் வீட்டுக்கு கரண்ட் பில்
மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தன்னால், எப்படி 17,000 ரூபாயை மின் கட்டணமாக செலுத்த முடியும்? என்று கலக்கமடைந்தார் பாலமுருகன் .. உடனே ஆண்டிபட்டி துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கண்டமனூர் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று, மின் உதவி பொறியாளரிடம் தனது நிலையை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டுள்ளார்.
ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு மாறாக, மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும், "கரண்ட் பில் கட்ட வேண்டிய கடைசி தேதிக்குள் இந்த 17,059 ரூபாயை முழுமையாக கட்டிவிட வேண்டும், இல்லாவிட்டால் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
மின்சார கட்டணம்
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாலமுருகன், பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டார்... இதற்கு பிறுகு பாலமுருகனின் வீட்டிற்கு வந்த மின்சார வாரிய அதிகாரிகள் அங்குள்ள மின் மீட்டரை ஆய்வு செய்தனர்.
பிறகு அதிகாரிகள், "எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை. நீங்கள் தான் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். அதனால் இந்த கட்டணம் சரியானது தான், இந்த கரண்ட் பில்லை கட்டித்தான் ஆக வேண்டும்" என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள்.. அதுமட்டுமல்லாமல் வீட்டின் மின்சார வயரிங்கில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம், அதை சரிபார்க்கவும் என்று அறிவுறுத்திவிட்டு போனார்கள்.
எலக்ட்ரீஷியன் சொன்னது என்ன
இதையடுத்து பாலமுருகன், தனது வீடு முழுவதும் உள்ள மின் வயர்களை எலக்ட்ரீஷியனை வைத்து சரிபார்த்துள்ளார். ஆனால், வயரிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை, அனைத்தும் சரியாகவே உள்ளது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பாலமுருகன் பேசும்போது, "என் வீட்டில் எல்லாமே சரியாக இருக்கும்போது, பழைய மின் மீட்டரில் தான் ஏதோ கோளாறு இருக்கிறது, அதை மாற்றித் தாருங்கள் என்று கேட்டால் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். கடன் வாங்கி என்னால் இந்த தொகையை செலுத்த முடியாது" என்று வேதனையுடன் சொல்கிறார்...
இந்த விவகாரத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தலையிட்டு, மின் கட்டணத்தை மறுஆய்வு செய்து, பழைய மீட்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலமுருகன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்...!!














Click it and Unblock the Notifications