“இதுதான் உன் பிறந்த நாள் பரிசு..” வீடியோ காலில் தற்கொலை செய்த இளம்பெண்.. நள்ளிரவில் பரபரப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஓட்டல் அறையில் 26 வயதான இளம்பெண் ஒருவர் வீடியோ கால் பேசியபடியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது நண்பரின் பிறந்தநாளுக்கான பரிசு இதுதான் என்று அவர் கூறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த புதன்கிழமை ரேணுகா என்ற இளம்பெண், அதிகாலை 3 மணியளவில் ஷேக் என்பவருடன் ஹைதராபாத்தின் லங்கர் ஹவுஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் ரூம் எடுத்துள்ளார். இருவரும் அன்றைய தினம் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் ஷேக் மட்டும் வெளியே கிளம்பிவிட்டார். ரேணுகா மட்டும் அறையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

பிறந்த நாள் பரிசு
இரவு 11.56 மணியளவில் ரேணுகா இரவு உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன்பிறகு, அதிகாலை 12.18 மணியளவில் தனது நண்பர் சத்யாவுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, மது அருந்த வேண்டாம், உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சத்யா அறிவுரை கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அப்போது ரேணுகா, "இன்று உன் பிறந்தநாள்... உனக்கான பிறந்தநாள் பரிசு இதுதான்" என்று கூறியதுடன், தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகக் கூறியிருக்கிறார். சத்யாவின் பிறந்தநாள் ஜூலை 4ம் தேதி உள்ள நிலையில், அன்று தான் ரேணுகா தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
வீடியோ கால் போய் கொண்டு இருந்தபோதே, ரேணுகா ஹோட்டல் ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா, உடனடியாக மற்றவர்களுக்குத் தகவல் தெரிவித்து ஹோட்டலுக்கு விரைந்தார். ஆனால் அவர்கள் அங்கு சென்றபோது ரேணுகா உயிரிழந்திருந்தார். ரேணுகா ஹைதராபாத் அல்வால் பகுதியைச் சேர்ந்தவர். திருமணமான அவருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த அவர், அங்குள்ள உள்ள பிரபல உணவகத்தில் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் தகவல்
இது தொடர்பாக லங்கர் ஹவுஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சையது முனவ்வர் அலி கூறுகையில், "ரேணுகா தனது நண்பருடன் வீடியோ கால் பேசி கொண்டிருந்தபோதே அதிகாலை 12.24 மணியளவில் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் ஓட்டலுக்கு வந்த நபர் வியாழக்கிழமை இரவே வெளியேறியுள்ளார். எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
ஆண் நண்பர்கள்
ரேணுகாவும் ஷேக்கும் அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பும் அவர் வேறு இரண்டு ஆண் நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு வந்ததாகவும் கூறப்படும் நிலையில், அது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஷேக் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர் பால் வியாபாரம் செய்து வருவதுடன், ரேணுகாவுக்கு நிதி உதவியும் செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகப் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 194ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், செல்போன் அழைப்பு விவரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் இதில் தொடர்புடைய மற்றவர்களின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரேணுகாவின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது விரைவில் தெரிய வரும் என்று தெரிகிறது.














Click it and Unblock the Notifications