நள்ளிரவில் இளம்பெண் துடிதுடித்து மரணம்.. அமோனியா கசிவு பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு! பயங்கரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா நச்சு வாயு கசிவு விபத்து, தமிழ்நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த விபத்தில் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்திருந்த சூழலில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த மற்றொரு பெண் உயிரிழந்தார். இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 11 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் இந்தத் தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில், இறால்களை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக அமோனியா வாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலையின் முக்கியக் குழாயில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக, நச்சுத் தன்மை கொண்ட அமோனியா வாயு ஆலை முழுவதும் கசிந்து வெளியேறியது.

விபத்து
இந்த நச்சு வாயுவை சுவாசித்த அங்கிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
11 பேர் உயிரிழப்பு
இருப்பினும், அதில் சிகிச்சை பலனில்லாமல் பலர் உயிரிழந்தனர். விபத்து நடந்த நாளில் இருவர் உயிரிழந்திருந்த நிலையில், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. நேற்று வரை இதன் காரணமாக மொத்தம் 10 பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
இந்த மோசமான விபத்தில் உயிரிழந்த பெரும்பாலானோர் வடமாநில தொழிலாளர்கள் ஆவர். இந்த விபத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.. மேலும், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை அந்தத் தனியார் ஆலை இயங்குவதற்கும் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதற்கிடையே தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இந்த இறால் பதப்படுத்தும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என 3 பேர் கொண்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications