எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு! காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்?
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் சென்னை, திருவண்ணாமலை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2021 -ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடன் நேற்று புதுவையில் எ.வ.வேலு இருந்த நிலையில் இன்று காலை எ.வ.வேலுவுக்குச் சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் திருவண்ணாமலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
பொதுவாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் எஃப்ஐஆர் போட்டுவிட்டு இது போன்ற சோதனைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் எ.வ.வேலு வீட்டில் எதற்காக சோதனை நடைபெறுகிறது, எந்த வழக்கு, யார் புகார்தாரர் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
எ.வ.வேலு சாலை பணிகள், கட்டடம் கட்டும் பணிகளுக்கான அமைச்சராக இருந்ததால் அது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அவரது வீட்டிற்குள் எத்தனை அதிகாரிகள் சென்றுள்ளனர் என்பது குறித்து தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில் கடந்த ஆட்சியில் பொதுப் பணித் துறையில் ஒப்பந்தம் பெற லஞ்சம் வாங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் பேட்டியளித்திருந்தனர். அது போல் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், லஞ்சம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் இந்த சோதனை நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையரான அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மற்றும் முறைகேடு புகார்களுக்கு உள்ளான இடங்களில் அதிரடிச் சோதனைகள் (Raids) முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அரசுத் துறை அலுவலகங்களில் மெகா சோதனைகள்
அருண் ஐபிஎஸ் இயக்குநராகப் பொறுப்பேற்றவுடன் தனிநபர்கள் மட்டுமின்றி, மக்கள் அதிகம் புழங்கும் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்ச்சியாக வந்த முக்கிய அரசு அலுவலகங்களை இலக்கு வைத்து 'ஆபரேஷன்' நடத்த உத்தரவிட்டார்.
62 சார்பதிவாளர் அலுவலகங்கள் (Sub-Registrar Offices): தமிழகம் முழுவதும் உள்ள 62 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத சுமார் ரூ. 38 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
40 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO Offices): சார்பதிவாளர் அலுவலகங்களைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஒரே நேரத்தில் கதவுகளை மூடி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 32 லட்சம் ரொக்கம் மற்றும் 'GPay' மூலம் லஞ்சப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் (ரூ. 6 லட்சம் வரை) கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள்
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஐபிஎஸ் பதவியேற்ற பிறகு, ஏற்கனவே நிலுவையில் இருந்த மற்றும் புதிய ஊழல் புகார்கள் மீதான விசாரணைகள் வேகம் எடுத்துள்ளன.
ஆர். வைத்திலிங்கம் (முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்): கடந்த 2011-16 காலகட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது வீட்டு வசதி வாரிய அனுமதிகளுக்கு ரூ. 27.9 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முந்தைய லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கை முடித்து வைக்கும் முடிவை மாற்றி, இந்த ஊழல் வழக்கை மீண்டும் தீவிரமாக மறுவிசாரணை (Reopen) செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை தற்பொழுது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications