செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் விஜய்? மின்வாரிய நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு
சென்னை: மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர் நிர்மல் குமார் வெளியிடுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை, செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 25ஆம் தேதி (இன்று) காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையினை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிடுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொது நிதி நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த ஆவணம் மாநிலத்தின் பொருளாதார எதார்த்தத்தை புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது.
அதன்படி, தமிழ்நாட்டின் நேரடிக் கடன் கடந்த ஐந்தாண்டுகளில் கணிசமாக உயர்ந்து ரூ. 10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GSDP) 28.3 சதவீதமாகும். பொதுத்துறை நிறுவனங்களின் கடன்கள் மற்றும் அரசின் இதர பொறுப்புகளையும் சேர்த்தால், மாநிலத்தின் மொத்த நிதிப் பொறுப்புகள் ரூ. 13.18 லட்சம் கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் தனிநபர் கடன் சுமை சராசரியாக ரூ. 1,28,934 ஆக அதிகரித்துள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.
மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில் நிலவும் ஆறு முக்கிய கவலைகளை இந்த வெள்ளை அறிக்கை முதன்மைப்படுத்துகிறது. அதிகரித்து வரும் கடன், வட்டிச் செலுத்துகை, பலவீனமான வரி வசூல் மற்றும் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
குறிப்பாக, மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை வரலாற்று உச்சமாக ரூ. 78,324 கோடியை எட்டியுள்ளது கவலைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண வருவாயைக் கொண்டு அரசின் தினசரிச் செலவுகளைக்கூடச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மூலதன முதலீடுகளுக்குப் பதிலாக அன்றாட நடப்பு செலவினங்களுக்கே அரசு கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது என இந்த வெள்ளை அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications