ஆதார் மட்டுமில்லை.. பாஸ்போர்ட் இருந்தாலும் நீங்க இந்திய குடிமகன் இல்லையாம்! வெடிக்கும் சர்ச்சை
டெல்லி: இந்தியாவில் ஆதாரை வைத்து குடியுரிமையை நிரூபிக்க முடியாது என்று எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கிடையே பாஸ்போர்ட் வைத்திருப்பதும் கூட குடியுரிமைக்கான ஆவணமாகக் கருதப்பட மாட்டாது என வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் குடியுரிமைக்கான ஆதாரம் எது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் 14வது பாஸ்போர்ட் சேவா திவஸ் கொண்டாட்டம் நேற்று ஜூன் 24ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது பாஸ்போர்ட் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.

பாஸ்போர்ட்
அதாவது இந்தியாவில் பாஸ்போர்ட் என்பது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒருவரது குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக பாஸ்போர்ட்டைக் கருத முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே வழங்கப்படும் பாஸ்போர்ட்டை கூட குடியுரிமைக்கான ஆவணமாகக் கருத முடியாது என்றால் இந்தியாவில் குடியுரிமைக்கான உண்மையான ஆதாரம் எது என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
பாஸ்போர்ட் என்பது சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்வதை எளிதாக்குவதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு பயண ஆவணம் மட்டுமே என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கியுள்ளது. அதாவது ஒருவரிடம் பாஸ்போர்ட் இருப்பதால் மட்டுமே அவர் இந்திய குடிமகன் என்பதை அது சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தாது.
குழப்பம்
ஆனால், இந்த விளக்கமே ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் இப்போது வரை நமது நாட்டில் இந்தியர் அல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை.. அப்படியிருக்கும்போது பாஸ்போர்ட் மூலம் குடியுரிமையை நிரூபிக்க முடியாது என்பது ஒரு முரண்பாடான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அவர் அதன் முழுமையான உரிமையாளர் அல்ல. பாஸ்போர்ட்டின் பின்புறப் பக்கத்தில், இது "இந்திய அரசின் சொத்து" என்றும் அரசு உத்தரவிடும்போது இதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற ஆவணங்கள்
பாஸ்போர்ட் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிற முக்கிய ஆவணங்களும் குடியுரிமைக்கான சான்றுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த வழக்கின் விசாரணையின் போது, ஆதார் அட்டை என்பது குடியுரிமைக்கான ஆவணம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. அது ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணம் மட்டுமே ஆகும்.
இதேபோல், வாக்காளர் அடையாள அட்டையும் குடியுரிமை ஆவணமாகக் கருதப்படுவதில்லை. இது முதன்மையாக ஒரு நபரின் அடையாளம் மற்றும் வசிப்பிடத்தை நிரூபிக்கவும், தேர்தல்களில் தனது வாக்குரிமையைச் செலுத்தவும் மட்டுமே பயன்படுகிறது.
சட்டம் சொல்வது என்ன
இந்திய குடியுரிமைச் சட்டங்களின்படி, ஒரு நபர் பிறப்பால் இந்தியக் குடிமகனா என்பதைத் தீர்மானிக்க சில அளவுகோல்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது ஜனவரி 26, 1950 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ.. அதேநேரம் ஜூலை 1, 1987க்கு முன்பாக இந்தியாவில் பிறந்த ஒருவர் பிறப்பால் இந்தியக் குடிமகனாகக் கருதப்படுவார். ஜூலை 1987க்குப் பிறகு பிறந்த ஒரு நபர், தனது பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டுமே குடியுரிமை கோர முடியும்.
அதேநேரம் டிசம்பர் 3, 2004 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவர்கள் பிறப்பால் இந்திய குடியுரிமை பெற வேண்டுமெனில், அவர்களின் பெற்றோர் இருவருமே இந்தியர்களாக இருக்க வேண்டும் அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியராகவும், மற்றொருவர் சட்டவிரோதமாகக் குடியேறியவராக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் விதியாகும்.












Click it and Unblock the Notifications