சட்ட விவகாரங்களில் தவெகவிடம்.. திமுகவுக்கு முதல் தோல்வி! எங்கு தவறு நடந்தது? விவரம்!
சென்னை: முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எதிராகவும், கரூர் விவகாரம் குறித்து அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது. ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரை சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்து. இதையடுத்து திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது. இது சட்ட ரீதியிலான விஷயங்களில் தவெகவுக்கு எதிராக திமுகவுக்கு முதல் பின்னடைவாகும்.
திமுகவின் லீகல் டீம் ரொம்ப பெருசு. மருத்துவ படிப்புகளுக்கான 27% ஓபிசி இடஒதுக்கீடு வெற்றி, ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து உத்தரவு.. இதெல்லாம் தமிழகத்திற்காக உச்சநீதிமன்றத்தில் போராடி திமுக பெற்றுக்கொடுத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

திமுகவின் வெற்றி
அதேபோல தவெகவுக்கு எதிரான வழக்குகள் என்று எடுத்துக்கொண்டால், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கிலும் சரி, திமுகவின் ஜென் Z தலைவர்கள் கைது வழக்கிலும் சரி திமுக சரியான வாதங்களை முன்வைத்து வெற்றி பெற்றிருந்தது. இந்த தொடர் வெற்றிக்கு நடுவே உச்சநீதிமன்றத்தில் தற்போது திமுக தரப்பு சந்தித்திருக்கும் பின்னடைவு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட விஷயங்களில் தெளிவாக இருக்கும் திமுக எப்படி இந்த விஷயத்தில் சொதப்பியது? மனுவில் என்ன தவறு இருந்தது? என்பது குறித்து பார்ப்போம்.
வழக்கு விசாரணை
கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி நேரில் சந்திக்கிறார். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்குகிறார். ஆனால், கரூர் நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. இந்த நேரத்தில் முதல்வர் நேரில் செல்வதும், அது குறித்து பேசுவதும் வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்று திமுக அமைப்பு செயலாளர் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மனுதாரர் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதங்களை முன்வைத்தார்.
பேச்சுரிமைக்கு தடையா?
வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இது குறித்து மீடியாக்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.. என்று வழக்கறிஞர் ரஞ்சித் குமார் பேசிய முடிக்க.. உடனே டென்ஷனான நீதிபதி விஸ்வநாதன், "என்ன நினைக்கிறீங்க நீங்க? முதல்வர் பேச்சையும், செய்திகளையும் உச்சநீதிமன்றம்தான் கட்டுப்படுத்த வேண்டுமா? பேச்சுரிமைக்கு தடை கேட்கிறீங்களா? அரசியல் எதிரிகளின் கருத்துக்கு எப்படி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க முடியும்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தவறான வாதம்
இங்குதான் சிக்கலே தொடங்கியது. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு பேச்சுரிமைக்கு எல்லாம் தடை வாங்க முடியாது. இதற்கு முன்னர் பேச்சுரிமைக்கு தடைக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கையில், முதல்வரை கரூர் சம்பவம் குறித்து பேசக்கூடாது என்று திமுக நீதிமன்றத்தை அணுகியது தவறு என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அரசு வேலை
அதேபோல திமுக செய்த இரண்டாவது தவறு, முதல்வர் விஜய் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அரசு பணி ஆணைகளை வழங்க கூடாது என்று கேட்டதுதான். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலையை வழங்க முதலமைச்சர் கரூர் போகிறார். அவரது பெயர் எஃப்ஐஆரில் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. ஆக.. இது எப்படி வழக்கின் விசாரணையை பாதிக்கும்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
முதல் பின்னடைவு
இதையடுத்து இந்த வழக்கை திரும்ப பெற திமுக முன்வந்தது. நீதிபதிகளும் வழக்கை தள்ளுபடி செய்து மனுவை வாபஸ் பெற அனுமதித்தனர். இப்படியாக மனுவை முறையாக தயாரிக்காததால்தான் இந்த வழக்கில் திமுக பின்னடைவை சந்தித்திருக்கிறது. எது எப்படி இருப்பினும், தவெகவுக்கு எதிரான விஷயத்தில் திமுக சந்தித்த முதல் பின்னடைவு இது.












Click it and Unblock the Notifications