திமுகவிற்கு உச்சநீதிமன்றம் வார்னிங்.. விஜய் கரூர் செல்வதை தடுக்க கோரிய மனு விசாரணையில் பரபரப்பு
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் அவர்களை முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி சந்திக்க உள்ளார். கரூருக்கு விஜய் செல்வதை எதிர்த்து திமுகவின் ஆர்எஸ் பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் கடும் வார்னிங் செய்ததோடு மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பரப்புரைக்கு சென்றார். கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் விஜய் சர்ச்சையில் சிக்கினார். இறந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு அழைத்து விஜய் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கினார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது பற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதையடுத்து, வரும் 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் விஜய் கரூர் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கி 5 நிமிடங்கள் ஆனது.
அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர்கள் 2 பேர் எழுந்து, ''முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தனர். அப்போது நீதிபதிகள், ''முதல்வரின் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?'' என்று கேட்டனர். அதற்கு திமுக வழக்கறிஞர்கள், ''இல்லை .. இந்த விவகாரத்தில் விஜய் சம்பந்தப்பட்டுள்ளார். ஏனென்றால் முதல்வர் விஜய்க்கும், சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளது'' என்றார்.
இதனால் நீதிபதி, ''முதல்வர் விஜய்யை கரூர் சம்பவத்தில் தொடர்புபடுத்தி பேசுகிறீர்கள். ஆனால் இந்த சம்பவத்தில் திமுக ஆட்சியில் தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கையில் கூட முதல்வர் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை. ஒரு வழக்கில் ஆஜராகும்போது குறைந்தபட்சம் வழக்கு சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆவணங்களையாவது படித்து விட்டு வந்திருக்க வேண்டும்.
நீங்கள் சொன்ன இந்த கருத்தை அடிப்படையாக வைத்து எங்களால் இப்போது கூட வழக்கை தள்ளுபடி செய்துவிட முடியும்'' என்று வார்னிங் கொடுத்ததோடு மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications