25% சம்பள உயர்வு.. நவீன கொத்தடிமை முறை! ஆலோசிக்காமல் அறிவிப்பதா? டாஸ்மாக் ஊழியர் சங்கம் எதிர்ப்பு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக தொகுப்பூதியத்தில் உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும், அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி என்பது, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பளத்தில் உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல் முந்தைய ஆட்சியாளர்களை போலவே நவீன கொத்தடிமை முறையை இந்த அரசும் தொடர்வது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.

25 சதவீத சம்பள உயர்வு
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வை அறிவித்தார். இந்த ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதலாக செலவு ஆகும். டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றியுள்ளார். இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். வரும் ஆகஸ்டு மாதம் முதல் ஊதிய உயர்வு அமலாகும் என்று கூறினார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அறிவித்துள்ளது. தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக டாஸ்மாக் ஊழியர்களின் தொகுப்பூதியத்தில் உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விரக்தியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் இன்று டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தில் 25 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. இது ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை இக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் 23 ஆண்டு காலமாக தொடர்ந்து பணிபுரிந்து ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுவதும், அரசுக்கு சொந்தமான இதர விற்பனை பிரிவுகளான அமுதம் அங்காடிகள், நியாயவிலை கடைகள், ஆவின் பாலகங்கள், கோஆப்டெக்ஸ் துணி கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் பஞ்சபடியும் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுவதும் அரசு தனது நிறுவன ஊழியர்களிடையே மாற்றந்தாய் மனபான்மையோடு அணுகும் போக்கு சரியல்ல என்பதை முந்தைய ஆட்சிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவீன கொத்தடிமை முறை
ஆனாலும் தொகுப்பூதியத்தில் சிறு உயர்வை அவ்வப்போது அறிவித்தார்கள். அதனை பின்பற்றியே தவெக அரசும் தொகுப்பூதியத்தை உயர்த்தியுள்ளது. இது ஊழியர்களின் வாழ்க்கை செலவினங்களை எந்த வகையிலும் ஈடுசெய்ய உதவாது என்பதை அரசு உணர வேண்டும். இந்த ஊதிய உயர்வைக்கூட ஊழியர்களின் பணி நிலைமையை கருத்தில் கொண்டு அறிவித்ததாக தெரியவில்லை. அமைச்சரின் பேச்சில் கூடுதல் விலை வைத்து விற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே உள்ளது.
அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி என்பது பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பளத்தில் உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல் முந்தைய ஆட்சியாளர்களை போலவே நவீன கொத்தடிமை முறையை இந்த அரசும் தொடர்வது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அரசு, இந்த தொகுப்பூதிய உயர்வை மறுபரிசீலனை செய்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை சம்பளத்துடன்கூடிய காலமுறை ஊதியம் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது.














Click it and Unblock the Notifications