ஒரே நாளில் 67 செமீ வெளுத்து வாங்கிய கனமழை... 22 இடங்களில் நிலச்சரிவு.. மும்பை-புனே சாலை முடங்கியது
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு புனேவில் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 67 செமீ மழை வெளுத்து வாங்கியுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பல முக்கிய சாலைகளும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட லேட்டாகவே தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்க வேண்டிய போது மத்திய இந்திய பகுதிகளில் வறண்ட வானிலையே இருந்தது. சில வாரங்களுக்கு பிறகே இந்த மாநிலங்களில் மழை மெல்ல ஆரம்பித்தது.

கொட்டும் கனமழை
இந்தச் சூழலில் தான் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்பது போல இப்போது தென்மேற்கு பருவமழை வந்து, தீவிரமடைந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிராவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மும்பை, புனே, லோனாவாலா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
புனேவில் சம்பவம்
புனே மாவட்டத்தின் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான லோனாவாலாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அதீத கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் புனே மாவட்டத்தின் 22 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலைகளில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததால் மும்பை - புனே விரைவுச்சாலை மற்றும் பழைய மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதன் காரணமாக இரு வழித்தடங்களிலும் வாகன போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது. கனமழை மற்றும் மலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் வரை போக்குவரத்து முடக்கப்பட்டு இருக்கும் என்றே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் இரு நகரங்களுக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை ரத்து
இதனிடையே கர்ஜத் - லோனாவாலா இடையேயான ரயில் வழித்தடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மும்பை - புனே இடையேயான ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாகுர்வாடி மற்றும் மங்கி ஹில் லூப் கேபின் இடையே தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால் முக்கிய ரயில் ரூட்கள் மறைக்கப்பட்டன. இதையடுத்து ரயில் பாதைகளில் இருக்கும் பாறைகளை அகற்றி, அதை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவு காரணமாக சிஎஸ்எம்டி - புனே இந்திராயணி எக்ஸ்பிரஸ், டெக்கான் குயின், டெக்கான் எக்ஸ்பிரஸ், சின்ஹகட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அகமதாபாத் - கோலாப்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - சிஎஸ்எம்டி மெயில் உள்ளிட்ட பல ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த ரூட்டில் ரயில் டிக்கெட் புக் செய்தவர்கள் தங்கள் ரயில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதன் பிறகு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.!
ரெட் அலர்ட்
கனமழை காரணமாக மும்பை, தானே, நவி மும்பை, பால்கர் மற்றும் புனே உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் அதி கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில், புனே மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர துடி உத்தரவின்படி புனே, பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சி பகுதிகள் மற்றும் 7 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்குத் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்வி பாதிக்கப்படாமல் இருக்க சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தொடங்கியுள்ளன. புதன்கிழமை மழையை பொறுத்தே பள்ளிகளுக்கு விடுமுறை இருக்குமா என்பது முடிவு செய்யப்படும்.
தொடர் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.














Click it and Unblock the Notifications