டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பளம் உயர்வு.. இனி ரூ.10 வாங்கினால் பணிநீக்கம்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றியுள்ளார். இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதலாக செலவு ஆகும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்டகாலமாக முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் கூறி வருகிறார். குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு எம்.ஆர்.பி க்கு மேல் கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் புகார்களை அடுக்கி வந்தனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் கூறிவந்த நிலையில், இன்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று மதுவிலக்கத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:-
தமிழக முதல்வர் விஜய் கூறியதன் பேரில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் இ.எஸ்.ஐ கோரிக்கையை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி மதுபானங்கள் எம்.ஆர்பி விலையில் ஊழியர்கள் விற்க வேண்டும். டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் ஊதியம் ரூ.22,313 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயராது.
எப்போது அமலுக்கு வரும்?
டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வரும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் அரசுக்கு 110.74 கோடி கூடுதலாக செலவு ஆகும். டாஸ்மாக் பார் உரிமம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
* உதவி விற்பனையாளருக்கு ரூ.14,030 -ல் இருந்து 17,925 ஆக ஊதியம் உயர்த்தப்படும்.
* விற்பனையாளர்களுக்கு ரூ.15,530-ல் இருந்து 19,413 ஆக ஊதியம் உயர்த்தப்படும்.
* சூப்பர்வைசர்களுக்கு ரூ. 17,850-ல் இருந்து 22,313 ஆக ஊதியம் உயர்த்தப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இனி பாட்டிலுக்கு ரூ.10 வாங்கக் கூடாது
இதுவரைக்கும் இந்த துறையில் இவ்வளவு பெரிய அளவில் ஊதியம் உயர்த்தப்படவில்லை. ரூ.500 உயர்த்தி இருப்பாங்க.. ரூ.800 உயர்த்தி இருப்பாங்க.. இந்த ஊதிய உயர்வுக்காக மட்டும் ரூ.553.74 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இன்னொரு விஷயம் என்னவென்றால், இஎஸ்.ஐ வேண்டும் என பலரும் கேட்டு வருகின்றனர். மருத்துவ செலவு அதிகமாக வருகிறது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டுமென சொன்னாங்க.. இதனையும் முதல்வர் விஜய் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
இது எல்லாம் எதற்காக என்றால், எம்.ஆர்பிக்கு உள்ள இருக்கிற விலையை மட்டுமே வாங்க வேண்டும் என்பதற்காக தான். இனி பாட்டிலுக்கு ரூ.10 வாங்கக் கூடாது என்பதற்காகவே. எனவே அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் கூடுதல் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு என்னுடைய துறை ஊழியர்களும் முக்கியம். அதே நேரத்தில் நுகர்வோரின் பணமும் முக்கியம். அவங்களும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இதை அரசு செய்கிறது.
மதுபானங்கள் விலை உயராது
எப்படி கட்சி நிதியை அரசுக்கு கொண்டு வந்தோம்மோ அதே போல நுகர்வோரின் பணமும் அவங்களுக்கு போகனும் என்பதற்காக தான் இந்த நடவடிக்கை. எங்களுடைய நோக்கம் இந்த துறையை சரி செய்ய வேண்டும் என்பது தான்.. ஊதிய உயர்வை கொடுத்து மதுபானங்களின் விலையை அதிகரிக்க மாட்டோம்.. மதுபானங்கள் விலை அதிகரிக்காது. இதுவரை 30 முதல் 40 ஊழியர்கள் மீது வரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார் உரிமம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், புது டெண்டர் கொண்டு வரனும். இதற்கு 15 நாட்கள் ஆகும். அதன் நடைமுறைக்கு 4 முதல் 5 வாரங்கள் ஆகும் என்பதால் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. பப் போன்ற இடங்களில் 21 வயதுக்கு உட்பட்டவர்களை உள்ளே நீங்கள் அனுமதித்தால் உங்களுடைய லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இது கடுமையான எச்சரிக்கை.. அந்த நிறுவனங்கள் இதனை முறையாக கண்காணிக்க வேண்டும். என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications