"எல்லாரும் ஓடுங்க.." வயநாடு நிலச்சரிவின் திகில் நொடிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ
வயநாடு: கேரளாவில் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், அங்கு இப்போது மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பான பகீர் வீடியோ ஒன்று இணையத்தை உலுக்கி வருகிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் மழைக்காலம் வந்துவிட்டாலே.. மண்சரிவு ஏற்படும் ஆபத்து அதிகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்த ஆபத்து இருக்கவே செய்கிறது. மலைச்சரிவால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.

நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் திடீரென மிகப் பெரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.. இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உயிர் பிழைக்க ஓடித் தப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்தாலே பதற வைக்கும் வகையில் இருக்கிறது.
மலப்பூர் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கம்பொயில் மேப்பாடி சுரங்கச் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லடி பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மீனாட்சி பாலம் அருகே மண் குவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர் மழையால் அந்த மண் திடீரென சரிந்து சாலையிலும் பாலத்தின் அருகிலும் சரிந்தது.
எல்லாரும் ஓடுங்க
இந்த சம்பவத்தை அருகில் நின்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், "வேகமாக ஓடுங்கள், நண்பர்களே.." என்று அவர் பதற்றத்துடன் கத்தும் சத்தம் தெளிவாக கேட்கிறது. அப்போது பெண்கள் உள்பட பலர் உயிர் பிழைக்க வேகமாக ஓடித் தப்பும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. நெஞ்சை உலுக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வேரோடு சாய்ந்த மரங்கள்
மண்சரிவின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளும் கூட அடித்துச் செல்லப்பட்டன. சில நொடிகளில் மிகப் பெரியளவில் மண் சாலையை முழுமையாக மூடிவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது. நிலச்சரிவுக்கு பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில்.. பாலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி முழுவதும் மண் அடுக்குகளால் மூடப்பட்டிருந்தது. மண்சரிவில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிகள்
இந்த மண் சரிவு குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனக்கம்பொயில் மேப்பாடி சுரங்கச் சாலைத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்த திட்டம் மலப்பூர் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மண்சரிவு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. மழை நீடிக்கும் சூழலில் மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications