பழனி முருகன் கோவில் வரலாற்றில் முதல் முறை.. ரூ.100 கோடியை தாண்டியது வருவாய்.. அடங்கேப்பா!
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவிலில் வரலாற்றில் முதல் முறையாக ஆண்டு வருவாய் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. உண்டியல் காணிக்கை, சிறப்புக் கட்டண தரிசனம், பூஜைப் பொருட்கள், பஞ்சாமிர்தம், பிரசாதங்கள் விற்பனை, தங்க தொட்டில், தங்க ரத புறப்பாடு உள்ளிட்ட கட்டண சேவைகளின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் மலைக்கோவில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடவுள் முருகரின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி முருகன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து முருகனை வழிபடுவது வழக்கம். இதனால் எப்போதும் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.

ஒரே ஆண்டில் ரூ.100 கோடி வருவாய்
தமிழ்நாடு மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அது மட்டுமின்றி கோவில்களில் பக்தர்களுக்காக பல்வேறு கட்டணம் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிறப்புக் கட்டண தரிசனம், பூஜைப் பொருட்கள், பஞ்சாமிர்தம், பிரசாதங்கள் விற்பனை, தங்க தொட்டில், தங்க ரத புறப்பாடு உள்ளிட்ட கட்டண சேவைகளின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் மலைக்கோவில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை பசலி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. இதனடிப்படையில், 2025 ஜூலை முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான கடந்த ஓராண்டில் பழனி கோவில் வரலாற்றிலேயே நடப்பு பசலி ஆண்டான 1435 ஆம் ஆண்டு ரூ.103 கோடியை தாண்டி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு கிடைத்த மொத்த வருவாய் ரூ.103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 ஆகும். இதில் பஞ்சாமிர்தம் விற்பனையில் ரூ.63 கோடியே16 லட்சத்து 7 ஆயிரத்து 320 கிடைத்துள்ளது.
ஆண்டு வாரியாக வருவாய்:
இதற்கு முன்பு நடைபெற்ற பசலி ஆண்டு வருமானத்தில்,
* 1430 ஆம் பசலி ஆண்டில் ரூ.15 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 560,
*1431 ஆம் பசலி ஆண்டில் ரூ.41 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 755,
* 1432 ஆம் பசலி ஆண்டில் ரூ.80 கோடியே 62 லட்சத்து 20 ஆயிரத்து 267,
* 1433 ஆம் பசலி ஆண்டில் ரூ.86 கோடியே 06 லட்சத்து 06 ஆயிரத்து 774,
* 1434 ஆம் பசலி ஆண்டில் ரூ.97 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரத்து 918 வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications