TNPSC: குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள்.. மதிப்பெண்கள், தரவரிசை லிஸ்ட்! எப்படி பார்ப்பது?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி ( www.tnpsc.gov.in ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. துறை வாரியாக காலிப்பணியிடங்களுக்கு ஏற்றபடி அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிடுகிறது. டிஎன்பிஎஸ்சி வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பினை, தமிழக அரசுத் துறைகளில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

குரூப் 2 தேர்வு
அந்த வகையில் தான் கடந்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி 645 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், நன்னடத்தை அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியானது.
இதே போன்று உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் (குரூப் 2ஏ) 595 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. பின்னர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மொத்தமாக 828 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.
தேர்வு முடிவுகள் வெளியானது
இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடந்தது. தேர்வை சுமார் 4,18,7911 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி, குரூப்-2, 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.
இதனால், அன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 15 ஆம் தேதி இந்த தேர்வு நடந்தது. காலையில் நடைபெற்ற தேர்வை 9,223 பேரும், பிற்பகலில் நடைபெற்ற தேர்வை 9,244 பேரும் எழுதினர். தேர்வு எழுதி முடித்த தேர்வர்கள் ரிசல்ட் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவை வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி ( www.tnpsc.gov.in ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இரு வழி தொடர்பு முறையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 பணியில் 525 தேர்வர்கள், குரூப் 2ஏ பணியில் 8,653 தேர்வர்களின் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.














Click it and Unblock the Notifications