வைகோவின் ரியல் நிறம் இதுதான்.. அவருடன் சென்றவர்கள் அனாதையாக்கப்பட்டனர்.. ஆர்.எஸ்.பாரதி அட்டாக்!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்மையான நிறத்தை வெளிப்படுத்திவிட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மதிமுக தொடங்கிய போது அவருடன் சென்றவர்கள் அனாதையாக்கப்பட்டதாக விமர்சித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, மதிமுக புறந்தள்ள வேண்டிய ஒரு கட்சி என்றும் சாடியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறிய சூழலில், திமுகவை கடுமையாக சாடி வருகிறார் வைகோ. திமுக ஆட்சியில் ஊழல், கமிஷன் பெறப்பட்டதாகவும், மக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்ததாகவும் விமர்சித்து வருகிறார். இதனை திமுக கூட்டணியில் இருந்த போது ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரையும் வைகோ சாடி இருக்கிறார்.

இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வைகோவை பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. வைகோவின் பேச்சை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை பற்றி கவலையே இல்லை. வைகோ என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளட்டும்.
வைகோ அவரின் அரசியல் பயணத்தின் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வேஷம் போட்டார் என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் சென்றவர்கள் அரசியலில் அனாதையாக்கப்பட்டனர். தொடக்க காலத்தில் இருந்த யாரும் இப்போது மதிமுகவில் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் மதிமுகவில் இருந்து பலரும் திமுக பக்கம் வரத் தொடங்கிவிட்டனர்.
அதனால் வைகோ என்ன வேண்டுமானாலும் புலம்பிவிட்டு போகட்டும். குதிரை பேரத்திற்கு விஜய் தூண்டியதை வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இன்னும் பல வேடிக்கைகள், விஷயங்கள் வெளியே வரும். வைகோவை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. திமுகவுக்கு வேறு வேலைகள் இருக்கிறது. இந்த விஷயங்களால் ஆட்சியில் நடக்கும் தவறுகள் திசை திருப்பப்பட்டு வருகிறது.
தவெக ஆட்சியில் இன்று மட்டும் 12 கொலைகள் நடந்திருக்கிறது.. அதனால் வைகோ போன்ற ஆட்கள் பேசுவதை எல்லாம் கேள்வியாக கேட்காதீர்கள். வைகோவின் ரியல் நிறம் வெளிப்பட்டுவிட்டது. தவெக கூட்டணி கட்சிகளுக்கு என்னனாலும் செய்துவிட்டு போகட்டும். தவெகவின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications