Hormuz strait: குஜராத் நோக்கி வந்த எரிவாயு கப்பல் மீது டிரோன் தாக்குதல்.. இந்திய மாலுமிகள் நிலை என்ன?
தெஹ்ரான்: கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் துறைமுகத்தில் இருந்து இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிக்கொண்டு இந்தியாவின் குஜராத்தில் உள்ள தஹேஜ் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிரோன் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் இந்த அட்டாக்கில் கப்பலின் என்ஜின் பகுதியில் தீப்பிடித்தது.
எனினும், இந்த தாக்குதலில் பயணித்த 4 இந்திய மாலுமிகள் உள்பட 29 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரான் மீது கத்தார் குற்றம் சாட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்படுவது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம்
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் போர் வெடித்தது. இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா வான் வழி தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கியது. உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தக் நடைபெறும் முக்கிய கடல் வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.
இதனால், உலக அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு கரும் நெருக்கடி ஏற்பட்டது. பல்வேறு நாடுகளும் போதிய எரிபொருள், உரங்கள் கிடைக்காமல் திண்டாடின. 100 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் உளிட்ட நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டன. இதன் பயனாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
போராக வெடிக்கும் அச்சம்!
நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்தது. உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்ட போதிலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருவது பேச்சுவார்த்தையை சீர்குலைத்து மீண்டும் முழு வீச்சில் போராக வெடிக்குமோ என்ற அச்சம் நிலவிக்கொண்டு இருக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போது போக்குவரத்து தொடங்கியிருப்பதால் கப்பல்கள் ஜலந்தியை கடந்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று கப்பல்கள் மீது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஈரான் மீதான எண்ணெய் தடையை மீண்டும் டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
எரிவாயு கப்பல் மீது தாக்குதல்
இதற்கிடையே, இந்தியாவுக்கு எல்.என்.ஜி இயற்கை எரிவாயு ஏற்றிக்கொண்டு வந்த கத்தார் நாட்டு கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் துறைமுகம் நோக்கி வந்த இந்த கப்பலில் 4 இந்திய சிப்பந்திகளும் பணியாற்றி வருகிறார்கள். டிரோன் தாக்குதல் என சந்தேகப்படும் இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-
இயற்கை எரிவாயு ஏற்றிக்கொண்டு அரபிக்கடல் பகுதியை நோக்கி வந்த 'அல் ரெகய்யாத்' என்ற கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஓமன் வளைகுடா பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தகவலின்படி, தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இருந்த போதிலும் உயிரிழப்போ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ எதுவும் இல்லை. டிரோன் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் இந்த தாக்குதலுக்குப் பிறகு கப்பலின் இயந்திர அறையில் தீப்பிடித்துள்ளது. தொடர்ந்து கரும்புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் கப்பலில் இருந்த அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications