தமிழ்நாட்டின் உள்ளே வரும் முதல் எக்ஸ்பிரஸ்வே.. அதுவும் எந்த இடத்தில் என்று கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
சென்னை: தமிழ்நாட்டில் நீண்ட காலமாக எக்ஸ்பிரஸ்வே எனப்படும் பசுமை வழி விரைவுச்சாலை இல்லை என்ற குறைபாட்டை போக்கும் வகையில் புதிய சாலை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தயாராகி வருகின்றன. இந்த சாலை எங்கே வருகிறது என்று கேட்கிறீர்களா? சென்னையின் மிக முக்கிய இடத்தை இணைக்கும் வகையில் இந்த சாலை கட்டப்பட உள்ளது.
மற்ற மாநிலங்களில்.. முக்கியமாக வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிக அளவில் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ்வே சாலையை தவிர வேறு சாலைகள் எதுவும் கட்டப்படவில்லை.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மாநில அரசு ஒரு புதிய மைல்கல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சென்னை ஒரகடம் - திருவண்ணாமலை இடையேயான 140 கிலோமீட்டர் நீளமுள்ள பசுமை வழி விரைவுச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, ஒரகடம் முதல் செய்யாறு சிப்காட் வரையிலான 43.4 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய விரைவுச்சாலை கட்டுமானத்திற்கான டெண்டர் கடந்த மார்ச் 2026-ல் அதிகாரப்பூர்வமாக கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் இதற்கான பூர்வாங்கப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதாவது திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. தற்போது அதை நீக்காமல் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டிற்கு உள்ளே வரும் பிரம்மாண்ட சாலை
இந்த புதிய விரைவுச்சாலை வெறும் சாதாரண நெடுஞ்சாலையாக இல்லாமல், முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் வசதி கொண்ட எக்ஸ்பிரஸ்வே தரத்தில் அமைக்கப்பட உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் வசதி என்றால் ஒரு சாலை செல்லும் வழியில் இருக்கும் கிராமங்கள் இந்த சாலையுடன் இணைக்கப்படாது. குறிப்பிட்ட பகுதிகளுடன் மட்டுமே இந்த சாலை இணைக்கப்பட்டு இருக்கும். இதனால் சாலை உள்ளே திடீரென வாகனங்கள் வருவது, மக்கள் சாலையை திடீரென கடப்பது, யூ டர்ன் எடுப்பது போன்ற பிரச்சனை தவிர்க்கப்பட்டு சாலை விபத்துகள் குறையும்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் தற்போது ஒரு சாலை உள்ளே எந்த பகுதியிலும் இணைய முடியும். பேரிகேட் இல்லாத பகுதிகளில் உள்ளே நுழைய முடியும். ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் வசதி கொண்ட எக்ஸ்பிரஸ் சாலைகளில் அப்படி செய்ய முடியாது.
இது 4 வழித்தடங்களையும், உள்ளூர் போக்குவரத்திற்காக இருபுறமும் தலா ஒரு சேவைச் சாலையையும்கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது.
வாகனங்கள் எவ்வித தடையுமின்றி அதிவேகமாகச் செல்வதை உறுதி செய்ய, முக்கிய சந்திப்புகளில் பிரத்யேக மேம்பாலங்கள் மற்றும் இன்டர்சேஞ்சுகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் விபத்துக்கள் குறைக்கப்படுவதுடன், பயண நேரமும் பெருமளவு மிச்சமாகும். இந்த 43.4 கி.மீ நீளமுள்ள சாலைப் பகுதியானது வலயங்காரணையில் உள்ள சென்னை வெளிவட்டப் பரிதிச் சாலையில் தொடங்கி, காஞ்சிபுரம் - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் உள்ள மணம்பதி சந்திப்பு வரை அமையவுள்ளது. இந்தத் திட்டம் மூன்று வெவ்வேறு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு விரைந்து கட்டி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை குறிப்பாக செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையின் மூன்றாம் கட்ட விரிவாக்கத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமையப்போகிறது. செய்யாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3,175 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இயங்கி வரும் சிப்காட் 1 மற்றும் 2-ஆம் கட்டப் பகுதிகள் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், புதிய தொழிற்சாலைகளின் சரக்கு போக்குவரத்தைக் கையாளுவதற்கு தற்போதைய சாதாரண சாலைகள் போதுமானதாக இல்லை. எனவே, இந்த புதிய 4 வழி விரைவுச்சாலை அமைக்கப்படும் போது, ஒரகடம் மற்றும் செய்யாறு தொழில் மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகங்களுக்கு மிக விரைவாகச் சென்றடைய வழிவகை ஏற்படும்.














Click it and Unblock the Notifications