பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம்
சென்னை: தமிழக அரசு பரந்தூர் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் சிட்காட் தொழிற்பூங்கா அமைக்க உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மே 10 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த தீவிர ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதில் மிக முக்கியமானது பரந்தூர் விமான நிலையத் திட்டம்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் நில உரிமை மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பரந்தூர் திட்டத்தை கடுமையாக எதிர்த்த விஜய், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் நிதி நிலை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையே சமநிலை பேணும் நிலைக்கு வந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, திட்டத்தை முற்றிலுமாக கைவிடாமல் ('ஹால்ட்' அல்ல), சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ('ஹோல்ட்') தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை விமான நிலையத்தின் நெருக்கடி
தற்போதைய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் தன் கொள்ளளவை எட்டிவிட்டது. ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையத்தில் intersecting runways இருப்பதால் ஒரே நேரத்தில் இரு ஓடுதளங்களையும் முழுமையாகப் பயன்படுத்த முடியாது. ஒரு மணி நேரத்துக்கு 36-40 விமான இயக்கங்கள் மட்டுமே சாத்தியம். 2030-க்குள் சென்னையின் தேவை ஆண்டுக்கு 5 கோடி பயணிகளாக உயரும் என எச்சரிக்கப்படுகிறது.
பரந்தூரில் திட்டமிடப்பட்டிருந்த 4,700 ஏக்கர் விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக, parallel runways உடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் முடங்கினால் சர்வதேச விமானங்கள் சென்னைக்கு வருவது கணிசமாகக் குறையும்.
அண்டை மாநிலங்களின் அசுர வளர்ச்சி
பெங்களூரு கெம்பேகவுடா மற்றும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையங்கள் ஏற்கனவே பெரிய விரிவாக்கத்துடன் இயங்கி வருகின்றன. பெங்களூரு 5 கோடிக்கும் மேல் பயணிகளைக் கையாளும் நிலையில் உள்ளது. புனேவும் புரந்தர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாநிலங்கள் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நிலையில் சென்னை பின்தங்கும் அபாயம் உள்ளது.
பொருளாதாரப் பாதிப்புகள்
விமானப் போக்குவரத்து முடக்கம் பன்னாட்டு முதலீடுகளை பாதிக்கும். ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் உற்பத்தியாகும் ஐபோன், ஆட்டோ உதிரிபாகங்கள் ஏற்றுமதிக்கு air cargo முக்கியம். இது பெங்களூரு, ஹைதராபாத் நோக்கி திரும்பும் அபாயம் உள்ளது. சென்னை சர்வதேச வரைபடத்தில் இருந்து மறையும் நிலை உருவாகலாம்.
விஜய் அரசின் சவால்
முதலமைச்சர் விஜய் விவசாயிகள் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையே சமநிலை பேண வேண்டிய கடினமான நிலையில் உள்ளார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் திட்ட வரைபடத்தை மாற்றுதல், வேலைவாய்ப்பு உத்தரவாதம் போன்ற மாற்றுத் திட்டங்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பரந்தூர் திட்டத்தை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் சென்னையின் உலகளாவிய போட்டித்தன்மை பாதிக்கப்படுகிறது. தமிழகத்தின் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி செல்ல வேண்டுமானால், விவசாயிகளின் கவலைகளைத் தீர்த்து, பரந்தூர் திட்டத்தை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications