“வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" - மதுரையில் அர்லேகர் எச்சரிக்கை
மதுரை: மதுரையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுநர் அர்லேகர்.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். இன்று காலை மதுரையில் சவுராஷ்டிரா கல்லூரி விழாவில் ஆளுநர் அர்லேகர் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், "மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன்.. ஆறு உள்ளது, நீர் எங்கே? இதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். மதுரை இளைஞர்கள் இதை ஒரு இலக்காக மாற்றி வைகையை மீட்டெடுக்க முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பகல் 12.30 மணியளவில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார் ஆளுநர் அர்லேகர்.
சுமார் 1.30 மணி நேரம் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், நிர்வாக செயல்முறைகள், மக்கள் குறை தீர்ப்பு, நிர்வாகத்தில் மின்னணு பயன்பாடு, நீர் நிலைகள் பராமரிப்பு, காச நோய் ஒழிப்பு, பொது சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு திட்டங்களும், அது செயல்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.
மேலும், காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் மாநகரில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்துள்ளார். சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான காவல்துறை நடவடிக்கை உள்ளிட்டவற்றையும் கேட்டறிந்துள்ளார்.
ஆளுநர், அரசு நிர்வாகத்தில் தலையிட்டு ஆய்வுக் கூட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.














Click it and Unblock the Notifications