ஒருவழியா மனசு வந்துருச்சு.. கரூர் செல்லும் விஜய்! ரெடியான எம்ஆர் விஜயபாஸ்கர்.. ஏற்பாடுகள் தயார்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான விஜய் வரும் ஜூலை 10-ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், கடந்த ஆண்டு தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்டம்பரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சந்தித்தார்.
கரூர் நெரிசல் சம்பவம்
அப்போது கட்சித் தலைவராக இருந்த விஜய், தேர்தலுக்குப் பிறகு நேரில் கரூருக்கு வந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்திருந்தார். அதன்பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகியும் விஜய் கரூருக்கு செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.
எம் ஆர் விஜயபாஸ்கர்
இந்த நிலையில், கரூர் அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்று (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வரும் ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் வருகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
அன்றைய பயணத்தின் போது, கரூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். மேலும், வேலுச்சாமிபுர கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கும் நேரில் சென்று, அவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் பயணம்
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் இந்த கரூர் பயணம், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
முக்கிய திருப்பம்
இதற்கிடையில் கரூர் அரசியலில் மற்றொரு முக்கிய திருப்பமும் ஏற்பட்டுள்ளது. கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், முதல்வர் விஜய் கரூர் பயணம் மேற்கொள்ளும் நிலையில், கரூர் ஆறுதல் நிகழ்வை ஒருங்கிணைப்பதே விஜயபாஸ்கர் தான் என்றும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications