இந்தியாவில் அதிக சம்பளம் தரும் டாப் 5 அரசு வேலைகள்! டிகிரி தகுதிதான்.. IT-க்கே சவால் விடலாம்!
சென்னை: நம் நாட்டில் தனியார் துறையை மிஞ்சும் வகையில் அரசு துறைகளிலும் சம்பளம் கிடைக்கிறது. குறிப்பாக மத்திய அரசு பணிகளில் பல லட்சங்களில் சம்பளம் கிடகிக்கிறது. சம்பளம் மட்டுமின்றி, சமூகத்தில் உயரிய அந்தஸ்து, அரசு குடியிருப்புகள், சலுகைகள் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவின் அரசு வேலைகளில் சம்பளம் கிடைக்கும் பணிகள் எவை எவை? அந்த பணிகளுக்கு என்ன மாதிரியான தேர்வுகள் எழுத வேண்டும். கல்வித் தகுதி என்ன? ஆகிய விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
ஐடி உள்ளிட்ட தனியார் துறை வேலைகளுக்கு போனால்தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற கருத்து இளைஞர்கள் மத்தியில் பொதுவாக நிலவுகிறது. உண்மையில் இந்தியாவில் அரசு வேலைகளிலே லட்சகணக்கில் சம்பளம் கிடைக்கிறது. இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் அரசு வேலைகள் எவையெல்லாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஐஎஃப்எஸ் அதிகாரி:
இந்திய வெளியுறவு சேவை அதிகாரிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.2,50,000 வரை வழங்கபடுகிறது. ஐஎப்எஸ் அதிகாரிகள் உலக அரங்கில் இந்தியாவின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர். இந்திய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் நிர்வாகத்தை கவனிப்பதுடன், வெளிநாடுகளுடன் முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
மூத்த தூதர்கள் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசின் உயர்ந்த பதவிகளில் பணியாற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள், உலக நாடுகளின் நகரங்களில் பணியாற்றும் வாய்ப்பு பெறுகிறார்கள். இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க அரசு பணிகளில் ஒன்றாக இது உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். யுபிஎஸ்சி இதற்கான தேர்வு நடத்துகிறது.
ஐஏஎஸ் அதிகாரி:
மாவட்ட ஆட்சியர், அரசு துறைகளில் செயலாளர்கள் உள்ளிட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மாதம் ரூ.56,100 - ரூ.2,50,000 சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் மட்டுமின்றி, அரசு கார்கள், அரசு சார்பில் குடியிருப்புகள், உதவியாளர் என பல சலுகைகள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஐபிஎஸ் அதிகாரி:
சட்டம் - ஒழுங்கை பராமரித்தல், குற்றத் தடுப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல் நிர்வாகத்தை வழிநடத்துதல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கவனிக்கும் பணி ஐபிஎஸ் பதவியாகும். அதேபோல, இந்திய வனப் பணி (IFoS) அதிகாரிகள் வன வளங்கள், வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை தொடர்பான பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த இரண்டு அரசுப் பணிகளுக்கும் ஒரே மாதிரியான சம்பளமே வழங்கப்படுகிறது. யுபிஎஸ்சி மூலமே ஐபிஎஸ் பணிக்கும் ஆட்சேர்ப்பு நடைபெறும். சம்பளம் மாதம் ரூ.56,100 - ரூ.2,25,000 வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வங்கிப் பணிகள்:
இந்தியாவில் மிகவும் மதிப்பு மிக்க பணிகளில் ஒன்றாக வங்கி பணிகள் உள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களாக வங்கிகள் இருந்தாலும் இந்த பணிக்கு கிடைக்கும் சம்பளம், சலுகை, பணி பாதுகாப்பு ஆகியவை காரணமாக இதற்கு தனி மவுசு இளைஞர்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அலுவலர்களுக்கு வங்கி துறைகளில் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ஆரம்பமே மாதம் ரூ. 78,450 - 1.54 லட்சம் + சலுகைகள் கிடைக்கின்றன.
பொதுத்துறை நிறுவன (PSU) நிர்வாக அதிகாரிகள்: மாதச் சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000-க்கும் மேல்..
நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு கை நிறைய சம்பளம் வழங்கப்படுகிறது. மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனங்களான ONGC, இந்தியன் ஆயில் (IOCL), NTPC உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாக அதிகாரிகள், சம்பளம் மட்டுமின்றி ஊக்கத் தொகையையும் பெறுகின்றனர். இதனால், இவர்களின் மொத்த வருமானம் பல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிஞ்சும் வகையில் இருக்கும். அதுபோக, குடியிருப்பு, வாகன வசதி, மருத்துவ காப்பீடு, குழந்தைகளின் கல்வி செலவு உள்ளிட்டவையும் கிடைக்கின்றன.
இஸ்ரோ விஞ்ஞானிகள்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓவில் பணியாற்றும் சயிண்டிஸ்ட்களுக்கு மாதம் ரூ.56,000 - ரூ.1,50,000 சம்பளம் வழங்கப்படுகிறது. பொறியியல் மற்றும் சயின்ஸ் பாடப்பிரிவில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.














Click it and Unblock the Notifications