அடுத்த விக்கெட் வேலுமணி? கொதிக்கும் கொங்கு மண்டலம்! அதிமுகவின் தளபதி ஆச்சே! அவரே சொன்ன விளக்கம்!
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக கோவை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. குறிப்பாக, அதிமுகவைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறி தவெகவில் இணைந்து வரும் சூழலில், எஸ்.பி.வேலுமணி அடுத்த என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவளித்ததால், எம்.எல்.ஏ.க்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டதால் அதிருப்தி நிலவியது.

அதே நேரத்தில், அதிமுகவைச் சேர்ந்த சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர்.
எஸ்.பி.வேலுமணி
அவர்களைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மான்ராஜ் மற்றும் சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனும் தவெகவில் இணைந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த சூழலில், அதிமுகவின் முக்கிய முகமாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் விரைவில் கட்சியை விட்டு விலகலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவின.
அதிருப்தி
குறிப்பாக, சமீபத்தில் கட்சி பொறுப்புகள் தொடர்பாக அவர் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருந்ததால், இந்த ஊகங்கள் மேலும் வலுப்பெற்றன. இந்த பரபரப்புக்கு மத்தியில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, தன்னைச் சுற்றியுள்ள அனைத்து வதந்திகளுக்கும் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், தாங்கள் ஏற்கனவே கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்திலேயே தங்களது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டதாக கூறினார். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அவர்கள் வகித்த பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர் விளக்கினார்.
அதிமுக
மேலும், "எங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்புகள் வேண்டாம். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக தொடர்ந்து செயல்படுவோம் என்று மட்டுமே தெரிவித்துள்ளோம். ஆனால், அதனை வேறு விதமாக சிலர் எடுத்துக்கொண்டு பல்வேறு தகவல்களை பரப்பி வருகின்றனர். அது சரியானது அல்ல" என்றார். அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மற்றும் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்காதது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
ஜாம்பவான்கள்
வழக்கமாக அத்தகைய கூட்டங்களுக்கு அழைப்பு வரும் என்றும், இந்த முறை தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும் கூறினார். கட்சித் தலைமையிடம் கடிதம் அளித்திருந்ததால் அழைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சமீபத்தில் தாம் பேசிய "ஜாம்பவான்கள்" என்ற வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்த மூத்த நிர்வாகிகளை குறிப்பிட்டே அந்த வார்த்தையை பயன்படுத்தியதாகவும், தனது பேச்சை முழுமையாக வெளியிடாமல் சில பகுதிகள் மட்டும் வெளியானதால் தவறான புரிதல் ஏற்பட்டதாகவும் விளக்கமளித்தார்.
எடப்பாடி பழனிசாமி
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாடுபட்டவர்கள் ஆகியோருக்கு உரிய மரியாதையும் பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், "அதிமுக நன்றாக இருக்க வேண்டும். கட்சி வலுப்பெற வேண்டும். அதற்காக பொதுச்செயலாளர் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
மோதல்
எஸ்.பி.வேலுமணியின் இந்த விளக்கம் மூலம், அவர் தற்போது அதிமுகவில் இருந்து விலகப் போவதில்லை என்பதையும், கட்சிக்குள் இருந்தபடியே தனது கருத்துகளை வலியுறுத்தி வருகிறார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications