ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மெகபூபா முப்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள்!
தெஹ்ரான்: ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். போர்ச் சூழல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த அவரது அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள், ஜூலை 3 முதல் ஜூலை 6 வரை தலைநகர் தெஹ்ரானில் நடைபெற உள்ளன.
இந்தச் சடங்குகளில் பங்கேற்க வருமாறு இந்தியத் தலைவர்கள் பலருக்கு ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து மெகபூபா முப்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு
மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்திக்கு ஈரான் அரசு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், "இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்" என்று தெரிவித்துள்ளார். அவர் ஈரானிய அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விமானம் மூலம் தெஹ்ரான் செல்கிறார்.
மெகபூபா முப்தி தவிர, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பவன் கேரா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பல ஷியா மதத் தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய அரசின் பிரதிநிதிகள்
இந்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்கின்றனர்.
வரலாற்று முக்கியத்துவம்
இந்தியா மற்றும் ஈரான் இடையிலான ஆழமான வரலாற்று மற்றும் ராஜதந்திர உறவுகளை இந்த அழைப்பு பறைசாற்றுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், இந்தியா தனது தூதரக உறவுகளைச் சமநிலைப்படுத்தும் விதமாக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறது.
தெஹ்ரானில் நடைபெறும் இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, ஜூலை 9-ம் தேதி மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் கமேனியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications