குழந்தைகளை சீரழித்த அரக்கன் சிறையில் காலம் கழிப்பதை விரும்பவில்லை.. மரண தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்
மதுரை: நெல்லை மேலப்பாளையத்தில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகர் என்பவனுக்கு போக்சோ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஐகோர்ட் மதுரை கிளை உறுதி செய்துள்ளது. "மனித குலத்திற்கு இடையே நடமாடும் தன் உரிமையை இந்த கைதி முற்றிலும் இழந்துவிட்டார்" என்று கூறி மரண தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சேகர். 41 வயதான இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி தனி வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்.

இந்த கொடூர சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்த சிறுமிகளை ஆனந்த் சேகர் கடுமையாக மிரட்டினார். இதனால் பயந்துபோன சிறுமிகள் யாரிடமும் சொல்லவில்லை. எனினும், சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இதை கவனித்த பெற்றோர் அவர்களிடம் அன்பாக விசாரித்தனர்.
அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், சிறுமிகளை சீரழித்த ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி, தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "குற்றவாளி உடல் ரீதியான குற்றத்தை மட்டும் செய்யவில்லை. 3 இளம் ஆன்மாக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி உள்ளார். கொன்றுவிடுவேன் என்று மரண பயத்தை காட்டி, ஒரு குழந்தை பாதிக்கப்படுவதை இன்னொரு குழந்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். திட்டமிட்டு மூன்று குழந்தைகள் மீதும் ஒரு பயங்கரவாதத்தையே நடத்தியிருக்கிறார்.
மனசாட்சி என்பது துளி கூடவா இல்லை. இவ்வளவு கொடூரமான குற்றத்திற்கு இந்தச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வெறுப்பையும், கோபத்தையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு தீர்ப்பு அவசியமாகிறது. குழந்தைகளை பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாகவே செயல்படும். மரண தண்டனை தீர்ப்பு பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. சமூகத்தின் ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சி.
இத்தகைய மிகக் கடுமையான வழக்கிலும் மரண தண்டனை விதிக்காமல், அதை ஆயுள் தண்டனையாகக் குறைப்பது, 'பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்நாள் முழுவதற்குமான நிம்மதியைக் குலைத்த ஒரு அரக்கன், சிறைச்சாலையின் வசதிகளோடு சுகமாக வாழ முடியும்' என்ற ஒரு மோசமான செய்தியை இந்தச் சமுதாயத்திற்குக் கொண்டு சேர்த்துவிடும். வக்கிர உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காகக் குழந்தைகளை வேட்டையாடுபவர்களைக் கையாளும் போது, சட்டம் உறுதித்தன்மையை கொண்டிருக்க வேண்டும்.
குற்றவாளி சிறையில் தனது காலத்தை அமைதியாக கழிப்பதை இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. மரண தண்டனை உறுதி செய்த உத்தரவு பாலியல் குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனித குலத்திற்கு இடையே நடமாடும் தன் உரிமையை இந்த கைதி முற்றிலும் இழந்துவிட்டார்" எனத் தெரிவித்து போக்சோ நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்.












Click it and Unblock the Notifications