பெரிய சிக்கலில் தமிழகம்.. கூடங்குளத்தில் கோளாறு! பவர் பிரச்சனையில் சிக்கும் தவெக!
சென்னை: தவெக அரசு புதியதாக பொறுப்பேற்றதிலிருந்து மின்வெட்டு பிரச்சனையை சீரியஸாக எதிர்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜெனரேட்டர் அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது.
மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் பெரிய அளவுக்கு மின் வெட்டு ஏற்படாது. வெளியில் தனியார் வசமிடமிருந்து மின்சாரம் தற்காலிகமாக வாங்கி விநியோகிக்கப்படும். ஆனால், இந்த கொள்முதல் மின்வாரியத்தின் செலவுகளை அதிகரிக்கும். இதுதான் தவெக அரசுக்கு உண்மையான பிரச்சனை.

சிக்கலில் மின்வாரியம்
சமீபத்தில் அமைச்சர் நிர்மல் குமார் மின்சாரத்துறை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மின்வாரியத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறியிருந்தார். தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் மின்சார வாரியம்தான் அதிக கடனை கொண்டிருக்கிறது. இதன் கடன் மொத்த பொதுத்துறை நிறுவனங்களின் கடனில் 77.6% ஆகும். அதே நேரம் மின்சார துறையிலிருந்து போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியிருந்தார்.
மின் கட்டணம்
இதெல்லாம் இருந்தாலும் கூட.. மின் கட்டண உயர்வு இருக்காது என்பது அமைச்சரின் முக்கியமான வாக்குறுதியாகும். இப்போது பிரச்சனை என்னவெனில், கூடங்குளத்தில் ஜெனரேட்டர் அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருப்பதால்.. முதலாவது அணு உலையில் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே தமிழகத்திற்கு தேவையான மின்சார விநியோகத்தின் அளவு குறைந்திருக்கிறது.
தனியார் நிறுவனத்திடம் கொள்முதல்
இதனால் நிலைமையை சமாளிக்க தனியாரிடத்திலிருந்து தற்காலிகமாக மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டியது வரும். தனியார் நிறுவனங்கள் என்ன சும்மாவா கொடுக்கும்? அவன் இஷ்டத்துக்குதான் விலை வைத்து கொடுப்பான்.. உதாரணத்திற்கு ஒரு யூனிட் 9 ரூபாய்க்கு அநியாமாக தனியார் நிறுவனம் விற்கும்.
உண்மையான பிரச்சனை
கூடங்குளம் உலை பழுது காரணமாக.. நமக்கு கிடைக்க வேண்டிய 462.5 மெகாவாட் மின்சாரம் தடைபட்டிருக்கிறது. இதை சமாளிக்க வெளியில் 462.5 மெகாவாட் மின்சாரத்தை வாங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 செலவாகும். ஆனால், நம் 462.5 மெகாவாட் மின்சாரத்தையும் முழுமையாக வாங்க மாட்டோம். பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் 462.5 மெகவாட் மின்சாரத்தை வாங்குவோம். இதனால் செலவு ரூ.10 கோடி என்பதற்கு பதில் ரூ.6-7 கோடியாக குறையும். ஆனாலும்.. செலவு செலவுதான்.
கூடங்குளம் சரியாகும் வரை இப்படி செலவு நடந்தால்.. தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் மேலும் அதிகரிக்கும். அப்புறம் என்ன? வேறு வழியே இல்லாமல் கரண்ட் பில்லை அரசு அதிகரிக்கும். அப்படி மட்டும் நடந்தால் தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையாக கொந்தளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications