மீண்டும் வெடிக்கும் போர்.. ஹார்முஸ் விவகாரத்தில் வாயை விட்ட ஈரான்.. உற்று பார்க்கும் அமெரிக்கா!
பெய்ஜிங்: உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடம் இனி சேவை கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேநேரம் சமீபத்திய போர் காலத்தில் ஈரானுக்கு ஆதரவாக இருந்த நாடுகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அந்நாட்டின் சீனாவுக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் பேசிய ஈரான் தூதர் அப்துல்ரேசா ரஹ்மானி பஸ்லி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களின் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஓமனுடன் இணைந்து புதிய நடைமுறைகள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.

ஹார்முஸ் சுங்க கட்டணம்
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில், 60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால், அந்த காலக்கெடு முடிந்த பிறகு என்ன நடைமுறை அமல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஈரான் புதிய சேவைக் கட்டண முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளது. இருப்பினும், இது சாதாரண சுங்கக் கட்டணம் அல்ல என்றும், பாதுகாப்பு மற்றும் வழிநடத்தல் சேவைகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்றும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தூதர் ரஹ்மானி பஸ்லி மேலும் பேசுகையில், "ஹார்முஸ் ஜலசந்தியின் ஒரு பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள் வருகிறது. எனவே, அந்தப் பகுதியில் வழங்கப்படும் சேவைகளுக்காக கட்டணம் வசூலிப்பது இயல்பான விஷயம். இதை சுங்கக் கட்டணமாக பார்க்கக் கூடாது.
சலுகைகள்
மேலும், கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்தல், கப்பல்களின் இயக்கத்தைக் கண்காணித்தல், அதிகரித்து வரும் கடல் போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை நிர்வகித்தல் உள்ளிட்ட சேவைகளுக்காக இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில், சமீபத்திய மோதலின் போது ஈரானுக்கு ஆதரவாக இருந்த மற்றும் நட்புடன் செயல்பட்ட நாடுகளுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படும்" என்றார். ஆனால் எந்தெந்த நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்பது குறித்து அவர் விரிவான தகவலை வெளியிடவில்லை.
ஹார்முஸ்
உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. எனவே, இந்த கடல் வழித்தடத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் சர்வதேச எண்ணெய் சந்தையிலும் உலகப் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
கச்சா எண்ணெய் விலை
சமீபத்திய மேற்கு ஆசிய மோதலின்போது, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால்.. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்தது. பின்னர் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதன் பிறகே கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக சரிந்தது.
இதற்கிடையில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்தே ஹார்முஸ் ஜலசந்திக்கான புதிய கட்டண முறை எப்போது அமலுக்கு வரும் என்பது தெளிவாகும் என்று சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.














Click it and Unblock the Notifications