அயோத்தி ராமர் கோயில் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை? விசாரணையில் திடுக் திருப்பங்கள்
லக்னோ: அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை முறைகேடு தொடர்பாகப் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையே குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் தூக்குத் தண்டனையையும் பரிசீலிக்கலாம் என்றும் ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ராமர் கோயில் விவகாரம் மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது. அங்கு பக்தர்கள் கொடுத்த பணத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், விசாரணை செல்ல செல்ல இதிலிருந்து பெரிய பூதம் வெடித்துள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமர் அறக்கட்டளை
இதற்கிடையே ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினர் மகந்த் தினேந்திர தாஸ் மகாராஜ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு மற்றும் நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை சரியானது. முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டதால்.. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இல்லையெனில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.
உபி அரசு தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாது. ராமர் கோயிலின் காணிக்கையை திருடுவது மிகவும் கொடூரமான குற்றம். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு தூக்கு தண்டனையும் வழங்கலாம்.
கோயில் பூஜைகள்
அதேநேரம் இந்த சர்ச்சையால் கோயிலின் அன்றாட வழிபாட்டு முறைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. கோயிலில் பூஜைகள் மற்றும் சடங்குகள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தற்போது காணிக்கை வசூல் மற்றும் நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதற்கிடையில் பரமார்த் நிகேதன் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சிதானந்த சரஸ்வதி மகாராஜும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் மட்டுமின்றி பத்ரிநாத் தாமிலும் காணிக்கை முறைகேடு குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், உண்மை முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அயோத்தி
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "அயோத்தி விவகாரத்தில் உத்தர பிரதேச அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், 15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், 10 நாட்களிலேயே முதற்கட்ட விசாரணை நிறைவடைந்து, தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, கடந்த ஜூலை 3ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று மேலும் ஆதாரங்களைச் சேகரித்தது. சிசிடிவி கேமரா ஆதாரங்கள் உட்பட முக்கியமான சில தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. விசாரணையை விரிவுபடுத்துவதற்காக, மாநில அரசு எஸ்ஐடிக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசமும் வழங்கியுள்ளது.
8 பேர் கைது
இந்த வழக்கில் எஸ்ஐடி தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ஜூன் 25ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் முன்னாள் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அயோத்தி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மேலும் பல திடுக் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications