"சிங்கப்பெண்களே.!" புதுமை பெண் திட்டம் தொடக்கம்..! டக்கென முதல்வர் போட்ட ட்வீட்.. மாணவிகள் குஷி
சென்னை: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகப் பல கல்வி உதவி திட்டங்களையும் அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு இப்படித் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கல்வி கற்கும் விகிதம் சிறப்பாக உள்ளது.
பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணம் திராவிடர் இயக்கம்:முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
கல்வி உறுதி திட்டம்
இந்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றப்படுவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். முன்னதாக இத்திட்டத்தில் பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றப்பட்டது.
'புதுமைப்பெண் திட்டம்'
அதன்படி 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் 1000 ரூவாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்தத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இவை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.
தொடக்கம்
இதற்கான தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி கலந்து கொண்டுள்ளனர். தொடக்க விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இது நாட்டிற்கே முன்னோடி திட்டம் எனக் குறிப்பிட்டுப் பாராட்டினார். மேலும், 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகளை கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பெண்களே…!
இந்நிலையில், புதுமைப் பெண் திட்டத்தில் பயன் பெற்ற மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சிங்கப்பெண்களே...! மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கல்விக்காக எவ்வகையில் பயன்படுத்தலாம் என்று வழங்கப்பட்டுள்ள கையேட்டைப் பயன்படுத்தி பெற்றோரின் வழிகாட்டுதலுடன் உயர்கல்வியில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்" என்றார்.