"சார் என்பது நாடகம்" ஞானசேகரன் அந்த வார்த்தையை பயன்படுத்தியது ஏன்? நீதிபதி விளக்கம்! 207 பக்க தீர்ப்பு விவரம்
சென்னை: "சார்" என்ற வார்த்த முழுக்க முழுக்க டிராமா என்பது அண்ணா பல்கலைக்கழக வழக்கில் வெளியான 207 பக்க முழு தீர்ப்பு விவரத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. ஞானசேகரன், தன்னிடம் சிக்கிய மாணவியிடம், தான் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றும் நோக்கத்திலும், மாணவியை திசை திருப்பி மிரட்டவும் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலமாக தெரிகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு தண்டனை விவரங்களை அறிவித்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் சில முக்கியமான விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது, இந்த வழக்கில் பெரும் கேள்வியாக எழுந்த யார் அந்த சார்? என்பது வெறும் நாடகம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

மாணவியை மிரட்டவே சார்
'ஞானசேகரன், தன்னிடம் சிக்கிய மாணவியிடம், தான் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றும் நோக்கத்திலும், மாணவியை திசை திருப்பி மிரட்டவும் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலமாக தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் என்ற நீண்ட நெடிய வரலாறு கொண்ட கல்வி நிறுவனத்திற்கு பல்வேறு கனவுகளுடன் வந்த மாணவியை ஞானசேகரன் சீரழித்துள்ளார். இதன்மூலம் பல்கலைக்கழகம் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தையும் ஞானசேகரன் அவமதித்துள்ளார். இதுபோன்ற அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது. அனுமதிக்கவும் முடியாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவொரு கருணையும் காட்ட முடியாது" என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி இரவு 19 வயதான 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் பலாத்காரத்தால் மாணவிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் கோட்டூர்புரம் போலீசார் இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை டிசம்பர் மாதம் 24-ந்தேதி கைது செய்தனர்.
நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு
அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் அந்த மாணவியை மிரட்டும் போது போனில் யாரோ ஒருவரை சார் என்று அழைத்து பேசி இருக்கிறார். இதையடுத்து பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடைய அந்த சார் யார்? என்ற கேள்வி தமிழகம் முழுவதும் எதிரொலித்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஞானசேகரன் மீது 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு அளிக்கப் பட்டது. நீதிபதி ராஜலட்சுமி தனது தீர்ப்பில், "ஞானசேகரன் குற்றவாளி என்று நிரூபணம் ஆகி உள்ளது.
ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை
அவர் மீது 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கிறேன்" என்று தெரிவித்தார். தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதில், ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தர விட்டார்.
தண்டனை முழு விவரம்:
பிஎன்எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா) சட்டத்தின்படி ஞானசேகரன் மீது குற்றம் சாட்டப்பட்ட 11 பிரிவுகள் மற்றும் அதற்கான தண்டனை விவரங்கள்:
* விருப்பத்திற்கு மாறாக அத்துமீறி நடத்தல் (பிரிவு 329) - 3 மாத சிறை.
* தடுத்து நிறுத்துதல் (126-2) - ஒரு மாத சிறை.
* வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல் (87) - 10 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
* காயம் ஏற்படுத்துதல் (127-2) - ஓராண்டு சிறை.
* விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் (75-2) - 3 ஆண்டு கடுங்காவல் சிறை.
* கடுமையாக தாக்குதல் (76) - 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
* மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தல் (64-1) - ஆயுள் தண்டனை. இதில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு செய்யக் கூடாது, ரூ.25 ஆயிரம் அபராதம்.
* கொலை மிரட்டல் விடுத்தல் (351-3) - 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
* தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறி வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல் (தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-இ) - 3 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்.
* வன்கொடுமை ஆதாரங்களை அழித்தல் (238-பி) - 3 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.
* தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 - பாலியல் குற்றச்சாட்டுக்கான பிரிவில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், இப்பிரிவில் தண்டனை விதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications