சென்னை மவுண்ட் ரோடு தர்ஹா உருஸ் விழா! பட்டுப்போர்வை கொடுத்தனுப்பிய சோனியா காந்தி!
சென்னை: சென்னை மவுண்ட் ரோடு தர்ஹா சந்தன கூடு திருவிழாவுக்கு பட்டுப்போர்வை வாங்கி கொடுத்தனுப்பியிருக்கிறார் சோனியா காந்தி.
சென்னை அண்ணா சாலையின் அடையாளங்களில் மவுண்ட் ரோடு தர்ஹாவும் ஒன்று. மவுண்ட் ரோடு அண்ணா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டாலும் இன்னுமே அங்குள்ள தர்ஹாவுக்கு மவுண்ட் ரோடு தர்ஹா என்று தான் பெயர். இந்த தர்ஹாவில் ஹஜ்ரத் சையத் மூசா ஷா காதிரி என்ற ஆன்மிக மகானின் அடக்கஸ்தலம் உண்டு. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என சர்வ மதத்தினரும் அங்கு வந்து செல்வதுண்டு.

நாகூர், ஏர்வாடி தர்ஹாக்களை போல் சென்னை மவுண்ட் ரோடு தர்ஹாவும் பிரபலம். அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் மவுண்ட் ரோடு தர்ஹாவுக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் தான் நேற்றிரவு ஏ.ஆர். ரஹ்மான் கூட இந்த தர்ஹாவுக்கு வந்து சென்றார்.
இந்நிலையில் மவுன்ட் ரோடு தர்ஹா நிர்வாக குழு கமிட்டி சார்பில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சந்தனக் கூடு உரூஸ் விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை கவுரவிக்கும் விதமாக மவுண்ட் ரோடு தர்ஹா சந்தனக் கூடு விழாவுக்கு பட்டுப் போர்வை வாங்கி கொடுத்தனுப்பியிருக்கிறார் சோனியா காந்தி.அதேபோல் பிரியங்கா காந்தி தாம் பங்கேற்க முடியாத சூழலை குறிப்பிட்டும், விழா சிறப்பாக நடைபெற வாழ்த்தும் தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார்.
சோனியா கொடுத்தனுப்பிய பட்டுப் போர்வையையும், பிரியங்கா கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கடிதத்தையும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசீனா சையத் முறைப்படி தர்ஹா பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து சோனியா காந்தி நீண்ட ஆயுளுடனும், ஆரோக்யமாகவும் வாழ வேண்டி சிறப்பு துஆவும் நடைபெற்றது.
இதனிடையே ஒரு வேளை பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வரும் பட்சத்தில் அவர் மவுண்ட் ரோடு தர்ஹாவுக்கு செல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications