தென் சென்னை தொகுதி 'ஸ்டார்' தொகுதி அல்ல.. 'சன்' தொகுதி.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பிரத்யேக பேட்டி
சென்னை: தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை நட்சத்திர தொகுதி இல்லை.. இது சூரியன் தொகுதி என்று தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
தென் சென்னை தொகுதி எம்பியும், தற்போதைய திமுக வேட்பாளருமான தமிழச்சி தங்கப்பாண்டியன் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேர்தலில் எங்களுக்கான களம் மக்களின் வரவேற்பை பார்க்கும் போது குளுகுளுவென இருக்கிறது.. தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை நட்சத்திர தொகுதி இல்லை.. இது சூரியன் தொகுதி.. ஜனநாயக தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக பணியாற்றுவார்கள்..

இங்குள்ள போட்டி என்பதை ஆரோக்கியமான போட்டியாகவே நான் பார்க்கிறேன்.. என்னை பொறுத்தவரை கடந்த முறையைவிட இந்த முறை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்காக வைத்து செயல்படுகிறேன்.. அதுமட்டும் தான் இப்ப என் கண்ணில் இருக்கு.. மக்களிடம் என்ன செய்திருக்கிறோம் என்பதை நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு மக்கள் கொடுக்கும் பதிலை அடிப்படையாக கொண்டு அவர்களுக்காக செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்...
அதேநேரம் அப்படி ஜெயிச்சிடுவோம் .. இப்படி ஜெயிச்சிடுவோம் என்ற ஓவர் நம்பிக்கை எல்லாம் இல்லை.. அதேநேரம் நிதானமாக, ஆனால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன்.. காரணம் மக்கள் தரும் நம்பிக்கை மற்றும் உற்சாகமான வார்த்தைகள் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.. தென் சென்னை தொகுதியை பொறுத்தவரை திமுகவின் கோட்டை.. இங்கு திமுகவிற்கு என்று வாக்கு வங்கி இருக்கிறது. இந்த முறை அதிக நம்பிக்கை வைத்திருப்பதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 3 ஆண்டுகால ஆட்சி மற்றும் அரசின் திட்டங்கள் தான்.. மகளிருக்கான விடியல் பயணமான கட்டணமில்லா பயணம் திட்டம், புதுமைப் பெண் மகளிர் திட்டம், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்விக்கான திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், காலை உணவு திட்டம் என இப்படி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் யானை பலமாக எங்களோடு இந்த தேர்தல் களத்தில் இணைந்திருக்கிறது.
ஒரு இடத்தில் நின்று கொண்டு வீடியோ போடுவது என்பது மிகவும் எளிது (அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனை விமர்சிக்கிறார்). ஆனால் நான் ஐந்து வருடத்தில் செய்த அத்தனை விஷயங்களும் சமுக வலைதளப்பக்கத்திலேயே இருக்கிறது.. அதனை பார்க்கும் மக்கள் ஷேர் செய்கிறார்கள். பலரும் பாராட்டுகிறார்கள்.. 2009 முதல் 2019 வரை 10 ஆண்டுகள் அதிமுக இந்த தொகுதியில் வென்றிருந்தது. 2014ல் ஜெயவர்த்தன் எம்பியாக இருந்தார். அவருடைய ஐந்து ஆண்டு காலத்தில் சிங்கப்பூராக மாற்றி இருக்க வேண்டியது தானே.. இதை எல்லாம் விட்டு விட்டு, இப்போது வந்து சும்மா, சும்மா வீடியோ போடுகிறார்கள். அந்த இடத்தில் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும்..
தமிழிசையை பொறுத்தவரை ஆளுநராக இருந்தவர், தென் சென்னைக்கு அவர் அக்காவா இருக்கலாம்.. அது மகிழ்ச்சி தான்.. அவர் நல்ல தோழி.. ஆனால் தென் சென்னை தொகுதி மக்களுடன் பயணிக்கின்ற அக்கா, அம்மா, அண்ணி, பாட்டி எல்லாம் நான்தான்.. இந்த தேர்தலில் பாஜக அதிமுகவை விமர்சிப்பது இல்லை.. பாஜக அதிமுகவை விமர்சிப்பது இல்லை.. இதில் இருந்தே இவர்கள் இருவருக்குமான புரிதலை பாருங்கள்..
நான் இந்த தொகுதியில் சுமார் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்.. பெருங்குடி குப்பை கிடங்கு, வேளச்சேரி ஏரியை சுற்றுலாதலமாக அறிவிப்பது, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஹாஸ்டல் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன்.. அழகான உறுப்பினர் தேவையா? அறிவான உறுப்பினர் தேவையா என்பது போன்ற உருவம் சார்ந்த பிரச்சாரங்களை நான் கொஞ்சம் கூடப்பொருட்படுத்துவது இல்லை.. இதுபோன்ற பிரச்சாரங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாரிசு அரசியலை பொறுத்தவரை பாஜக பட்டியலை பார்த்துவிட்டு திமுக மீது வைக்க வேண்டும்.. " இவ்வாறு கூறினார். பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார். அதை வீடியோவில் பாருங்கள்..












Click it and Unblock the Notifications