ஒரே காரணத்தை தான் சொல்றீங்க.. குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு!
சென்னை : குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ ஒரே காரணத்தை கூறி வருவதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி பல இடங்களில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ போலீசார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை சிபிஐ நிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பு தெரிவித்தது. சிபிஐ தொடர்ந்து இதே காரணத்தை கூறி வருவதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரி விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications