சென்னை மக்கள் கவனத்துக்கு..வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்
சென்னை: தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 30 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வகையில், ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக வருகிற 24 ஆம் தேதி (சனிக்கிழமை), 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறும்.

முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நபர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் - 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல், திருத்தம் செய்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications