இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழ்நாட்டை சேர்ந்த 24 மீனவர்கள் கைது! 4 படகுகளும் பறிமுதல்
சென்னை: ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், இன்று 25 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் கைது நடவடிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் ஜனவரி தொடங்கி இன்றைய தேதி வரையில் இந்திய மீனவர்களின் 32 படகுகளையும், 238 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் இலங்கை கடற்படை கூறியிருக்கிறது. மேலும், தனது கடல் எல்லையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று 24 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்திருக்கிறது. இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படை விளக்கமளித்திருக்கிறது. மீனவர்களின் 4 நாட்டுப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து மீனவர்களிடம் கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், "25.6.2024 தேதி TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டும்" என கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications