மணற்கேணி இணைய தளம்.. பள்ளி பாடங்கள் இனி உலகத்தரம்.. ஈஸியா ஆன்லைனில் பாடங்களை படிக்கலாம்
சென்னை: பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது. காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம்.
தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்குச் செல்லவேண்டும் என்கிற நோக்கத்துடனும், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதை எளிதாக்கி சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சரிசெய்து சமூக நீதியை நிலைநாட்டவேண்டும் என்கிற இலக்குடனும் தமிழ்நாடு அரசு 2023ல் மணற்கேணி செயலியை அறிமுகப்படுத்தியது.

மணற்கேணி செயலியை தரவிறக்கம் செய்து அதில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் போர்டில் திரையிட்டுக் காட்டி பாடங்களை நடத்தி வந்த ஆசிரியர்கள் இனி இணையதளம் வாயிலாக பாடங்களை நடத்தலாம். காட்சி ரீதியாக பாடங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றல் மேலும் எளிதாகும்.
மணற்கேணி செயலி உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் என யாரும் பயன்படுத்தும் வகையில் ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாகவும் பயன்படுத்தலாம் என்பதால் அலைபேசி வாயிலாகவும் கணினி வாயிலாகவும் இதனை பயன்படுத்தலாம். இப்படிப் பயிற்றுவிப்பதன் வாயிலாக பொதுத் தேர்வில் கேட்கப்படும் எந்த வகையான கேள்விகளுக்கும் மாணவர்கள் எளிதாக விடையளிக்க முடியும்.
ஜே.ஈ.ஈ போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கும் எளிதில் தயாராக முடியும். கடந்த பல ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அடங்கிய வினா-விடை வங்கி ஒன்றும் உண்டு. போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகள் என அனைத்தையும், மணற்கேணியை துணைக்கருவியாகக் கொண்டு பாடங்களை கற்பிப்பதன் மூலம் மாணவர்களை மிக எளிதாக ஆசிரியர்கள் வெற்றிகொள்ள வைக்க முடியும். இந்தக் காணொலிகள் 2டி மற்றும் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ளதால் கற்போர் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியும்.
மணற்கேணி செயலி தற்போது புதிய வடிவமெடுத்திருக்கிறது. அதாவது காணொளிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணும் வகையில் மணற்கேணி இணையதளத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
https://manarkeni.tnschools.gov.in என்ற மணற்கேணி இணையதளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை பல பாடப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களை கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (NCERT) நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
இதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் பாடப்பொருள்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 6, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக பாடப்பொருள்கள் காணொளியாக தரப்பட்டுள்ளன.
செல்போனில் மணற்கேணி செயலியை ப்ளே ஸ்டோரில் இதுவரையிலும் 2,00,000 முறை இச்செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது உருவாக்கப்பட்ட மணற்கேணி இணையதளம் வாயிலாக இன்னும் அதிகமானோரை இக்காணொளிகள் சென்று சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications