மோசமான நிர்வாகம்; அடிக்கடி நெட்வொர்க் துண்டிப்பு; இந்தியன் வங்கியை வெளுக்கும் சு.வெங்கடேசன் MP!
சென்னை: தமிழ்நாடு கிராம வங்கி மிக மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி.
ஏற்கனவே இது குறித்து 2 முறை கடிதம் எழுதியும் தமிழ்நாடு கிராம வங்கியை கட்டுப்படுத்தும் இந்தியன் வங்கி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என புகார் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இது தொடர்பாக இந்தியன் வங்கி நிர்வாகத்தை வெளுத்து வாங்கியுள்ள அவர் மீண்டும் 3-வது முறையாக கடிதம் எழுதியிருக்கிறார்.
அதன் விவரம் பின்வருமாறு;
''வங்கியின் வளர்ச்சி, வாடிக்கையாளார் சேவை, ஊழியர்கள் நலன் குறித்து அக்கறை கொள்ளாமல் ஒரு மோசமான நிர்வாகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம்.
வங்கியின் தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்படவில்லை. அடிக்கடி நெட்வொர்க் துண்டிக்கப்பட்டு வங்கியின் பணி தடைபடுகிறது. நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் போன்ற முக்கிய பணப் பரிவர்த்தனைகள் முடங்கி விடுகின்றன. வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தொழில்நுட்ப வசதி கூட தமிழ்நாடு கிராம வங்கியில் இல்லை.
குழுக்களுக்கு கடன் வாங்கி கொடுத்து, அதை வசூலித்து திரும்ப செலுத்துவது போன்ற வணிகத்தின் குறிப்பிடத்தக்க அளவை என்.ஜீ.ஓ.,க்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறது நிர்வாகம். பல இடங்களில் குழுக்களிடம் வசூலித்து அதை வங்கியில் செலுத்தாத போக்கு அதிகரித்து வருகிறது. இது வங்கியின் எதிர் காலத்துக்கே பேராபத்தாய் முடியும்.
இது போன்ற முக்கிய பிரச்சினைகளைப் பேசுவதாலும், முன்னெடுப்பதாலும் அங்குள்ள தொழிற்சங்கங்கள் மீது வன்மம் கொண்டு விரோதமாக நடந்து கொள்கிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பழிவாங்குகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே கிராம வங்கியான, தமிழ்நாடு கிராம வங்கி. அதன் வளர்ச்சியிலும், நலனிலும் அக்கறை கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் பொறுப்போடு, அதனைக் கட்டுப்படுத்தும் இந்தியன் வங்கித் தலைமைக்கு ஏற்கனவே இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 2 கடிதங்கள் எழுதி இருந்தேன். இந்தியன் வங்கி நிர்வாகமும் இதில் தலையிட்டு சரி செய்வதாக சொல்லி இருந்தார்கள்.
ஆனால் இன்று வரை தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள பிரச்சினைகள் சரி செய்யப்படவில்லை. அதன் நிர்வாகம் மேலும் மோசமாக நடந்து வருகிறது. எனவே இந்தியன் வங்கி நிர்வாகத்துக்கு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்திருக்கிறார்.''












Click it and Unblock the Notifications