தெற்கு ரயில்வே பணிக்கு பெங்களூர் தேர்வர்களை நியமிக்க முடிவு.. சு வெங்கடேசன் எம்பி கடும் எதிர்ப்பு
சென்னை: தெற்கு ரயில்வேயில் பெங்களூர் தேர்வர்களை நியமிக்ககூடாது என்று மதுரை எம்பி சுவெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய ரயில்வே பணி, தேர்வு தொடர்பாக அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பிற மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு.
மேலும் ரயில்வே பணியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதாவது தமிழகத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களிலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இதன்மூலம் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், இந்த விஷயத்தில் தமிழர்களுக்கு துரோகம் இளைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டு உள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கையை கைவிட வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொரடர்பாக சு வெங்கடேசன் எம்பி கூறியுள்ளதாவது:
தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட் வருங்கால காலியிடங்களை பெங்களூரு ஆர்ஆர்பி(bangalore rrb) தேர்வர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிகிறேன். இது தெற்கு ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாகும். இம்முடிவை உடனடியாக கைவிட வேண்டும்'' என கூறியுள்ளார்.