20 லட்சம் ஓட்டுகளை நீக்கிய முதல் தேர்தல் அதிகாரி! யார் இந்த சுகுமார் சென்?
சென்னை: இந்தியாவில் முதல் மக்களவைத் தேர்தல் எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இது 18ஆவது மக்களவைத் தேர்தலாகும். குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு 1951-52 இல் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் அன்று 364 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தக் கட்சி மொத்தம் 47,665,951 வாக்குகளைப் பெற்றது. அதாவது 44.99% வாக்குகள்.
அடுத்து சோசியலிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் வென்றிருந்தது. இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 11,216,719 ஆகும். அதாவது 10.59% ஆகும். இதன் தலைவராக நரேந்திர தேவா இருந்தார்.
சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இக்கட்சி மொத்தம் 3,487,401 வாக்குகளைப் பெற்றது.
ஆனால், நாட்டின் முதல் தேர்தல் எளிதாக நடந்துவிடவில்லை. அதில் பல கஷ்டங்கள் இருந்தன. குறிப்பாக இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சில அதிரடியான காரியங்களைச் செய்தார். அவர் போட்ட அடித்தளம் தான் இன்று நம் நாடு ஜனநாயக தேர்தல் பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகின்றது.

ஒடிசா மாநிலம் உள்ள பல மாநிலங்களில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணன், முதல் தேர்தல் எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றிப் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஆர்.பாலகிருஷ்ணன் பேசும் போது, "இந்தியா குடியரசு ஆனது 1950 ஜனவரி 26 என்பது பலருக்கும் தெரியும். ஆனால், தேர்தல் ஆணையம் எப்படிப் பிறந்தது எப்போது தெரியுமா? இந்தியா குடியரசாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 1950 ஜனவரி 25.
இந்தியா குடியரசு நாடாக மாறுவதற்கு முன்பாக ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், நாட்டை ஜனநாயக ரீதியாக வழிநடத்த ஒரு அமைப்புத் தேவை என அன்றைய தலைவர்களான நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் முடிவு செய்தார்கள். ஆகவே, அதன் அடிப்படையில் குடியரசு ஆவதற்கு ஒருநாள் முன்னதாகவே தேர்தல் ஆணையம் நிலைநாட்டப்பட்டது.

அன்றைக்கு நேரு உள்ளிட்ட தலைவர்களால் முதல் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சுகுமார் சென். இவர்1950 மார்ச் 1950 முதல் 19 டிசம்பர் 1958 வரை பதவியிலிருந்தார்.
இவரது தலைமையின் கீழ் தேர்தல் ஆணையம் சுதந்திர இந்தியாவின் முதல் இரண்டு பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.
இவரைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு நேரு அவரை படாதபாடு படுத்தினார். தேர்தலை உடனடியாக நடத்தச் சொல்லி அழுத்தங்களைக் கொடுத்தார்.
அதற்கு சுகுமார் சென் மறுப்பு தெரிவித்தார். நீங்கள் நினைப்பதைப் போல வேகமாகத் தேர்தலை நடத்த முடியாது. தேர்தலை நடத்த வேண்டும் என்றால் வாக்காளர் பட்டியல் வேண்டும். அதைத் தயாரித்தால்தான் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. மெட்ராஸில் மட்டுமே தெலுங்கு பேசுபவர்கள் தமிழ் பேசுபவர்கள் மலையாளம் பேசுபவர்கள் எனப் பன்மொழி கலவையான மக்கள் இருந்தார்கள். அன்றைக்கு மெட்ராஸ் பிரசிடென்சி ஆக இருந்தது.
ஆகவே இப்படிப் பல மொழிகளில் வாக்காளர் பட்டியலைத் தயாரித்து அவர் வெளியிட்டு சாதனை செய்தார். அந்த வேலையை அவர் எளிதாகச் செய்து முடித்துவிடவில்லை.

அவர் ஹரியான, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாக்காளர் பெயர்களைப் பதியச் சென்றால் ஆண்கள் தங்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். பெண்கள் தங்களின் கணவனின் பெயரைச் சொல்ல மறுக்கிறார்கள்.
அதே போல் கணவர்கள் தங்களின் மனைவி பெயரைச் சொல்ல மறுத்தனர். பெயரைச் சொன்னால் அதை வாக்காளர் பட்டியலில் அச்சடித்து வெளியிடுவீர்கள். எங்கள் வீட்டுப் பெண்களின் பெயர்கள் அச்சில் வரும். அதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்கிறார்கள்.
வேண்டுமானால் இந்தக் கணவரின் மனைவி என்று போடுங்கள். மனைவி பெயர் வேண்டாம் என்று மறுத்தார்கள். அந்த விசயம் சுகுமார் சென் கவனத்திற்கு வந்தது. அவர் 1 மாதம் அவகாசம் தருகிறேன். யார் எல்லாம் பெயர் தருகிறார்களோ அவர்கள் பெயரை மட்டும் சேருங்கள் என்று உத்தரவு போட்டுவிட்டார்.
அதன்பின்னர் பலர் பெயரைப் பதிவு செய்தனர். அப்படி இருந்தும் 20 லட்சம் பேர் மனைவியின் பெயரைச் சொல்ல மறுப்பதாக ஒரு தகவல் வந்தது. அப்படி என்றால் மனைவி பெயரைச் சொல்லாத 20 லட்சம் பேரின் பெயரையும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவு போட்டார் சுகுமார் சென்.

பல கட்சிகள் பயந்து போயின. நம் கட்சியின் வாக்கு குறைந்துவிடும் என்று நடுங்கிப் போயின. அது 1957இல் 2வது தேர்தல் வந்தது. பெயர் சொல்ல மறுத்தவர்கள் எல்லாம் வரிசையில் நின்று பெயரைப் பதவி செய்தார்கள்.
அன்றைக்கு 21 வயது நிறைவடைந்தவர்களுக்குத்தா வாக்களிக்கும் உரிமை இருந்தது. பின்னால்தான் 18 வயது என மாற்றப்பட்டது.
இத்தனைக்கும் அடிபோட்டவர் அன்றைய தேர்தல் அதிகாரி சுகுமார் சென். அவர் இல்லை என்றால் இன்றைக்குப் பல விசயங்களில் நம் நாடு முன்னேறி இருக்க வாய்ப்பு இல்லை. அவர் போட்டி அடித்தளம் அவ்வளவு வலுவானது" என்கிறார்.












Click it and Unblock the Notifications