கரண்ட் பில் நீங்க கட்டிட்டீங்களா? அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா? மின்வாரியம் சரவெடியை பாருங்க.. நிம்மதி
சென்னை: கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க, மின்மாற்றிகள், கேபிள்களை சீரமைக்க சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சமீபகாலமாகவே, தினசரி மின்தேவையானது அதிகரித்தபடியே உள்ளது.. கடந்த வருடம் ஏப்ரல் 20-ம் தேதி, தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது. இதுவே இதுவரையிலான உச்சபட்ச மின்தேவை அளவாக உள்ளது.

மின்தேவைகள்: கடந்த ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்ட நிலையில், இனிவரும் வெயில் காலமான, ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையானது எப்படியும் 20,000 மெகாவாட்டை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரமும், மத்திய மற்றும் தனியார் நிறுவன மின்சாரமும் நமக்கு போதுமானதாக இருக்காது.
மின்வாரியம் முடிவு: அதனால்தான், 3,571 மெகா வாட் மின்சாரம் வாங்குவதற்காக மின் வாரியம் முன்பு ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக 4 நாட்களுக்கு முன்புகூட செய்திகள் வெளியாகியிருந்தன..
இன்னும் ஒரு மாதத்திற்குள் 4,321 மெகா வாட் வாங்கப்பட உள்ள நிலையில், இதில், 600 மெகா வாட் பரிமாற்ற முறையிலான மின்சாரமும், மீதி மெகாவாட்கள் மின் கொள்முதல் என்றும் சொல்கிறார்கள். இந்த மின்சாரத்தை, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி போன்ற டில்லி மாநிலங்களிடம் இருந்து பெறப்பட உள்ளதாம்..
மின்சாரம்: அதேபோல, இந்த மின்சாரத்திற்கு பணம் எதுவும் தரப்போவதில்லையாம். அதற்கு பதிலாக, தமிழகத்தில் காற்றாலை சீசன் துவங்கியதுமே, பரிமாற்ற முறையில் வாங்கப்படும் மின்சாரம் அந்தந்த மாநிலங்களுக்கே திரும்ப வழங்கப்பட்டுவிடுமாம்.. இதுஒரு குறுகிய கால ஏற்பாடு என்றாலும், கோடை காலத்தில் நம்முடைய மின்தேவை இதனால் பூர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.
இதுஒருபக்கம் இருந்தாலும், கோடை காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மின்வாரியம் சிறப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாம்.
கோடை காலம்: அதாவது, கோடை காலத்தில் AC, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்.. அதுவும் இல்லாமல், இந்த வருடம் கோடையில்தான், எம்பி தேர்தல் நடக்க போகிறது.. இதையெல்லாம் கணக்கில் வைத்துதான், தினசரி மின்தேவை 20, 744 மெகாவாட் அளவை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கோடையில் அதிக வெப்பம் காரணமாக, மின்விநியோகம் செய்யப்படும் கேபிள்கள், மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்) உள்ளிட்டவற்றில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின்வெட்டு, குறைந்தழுத்த மின்விநியோகம் உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகின்றன.. அதனால், இந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேபிள்கள்: எனவே, முதற்கட்டமாக துணைமின் நிலையங்கள் அருகிலுள்ள மின்மாற்றிகள் பராமரிக்கப்பட்டு அவற்றின் தரம் உயர்த்தப்பட உள்ளது.. அதே போல், தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளது.. குறிப்பாக, குறைந்தழுத்த மின்விநியோகம் செய்யப்படும் இடங்களில் அப்பிரச்சினையைத் தீர்க்க கேபிள்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை மாற்றப்படும் என்கிறார்கள்.
மொத்தத்தில், மின்தேவையை தீர்க்கவும், கோடையில் கரண்ட் பிரச்சனையால் யாரும் அவதிப்படாமல் இருக்கவும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications