சென்னை விமான நிலையத்தில் முதல்முறையாக சூப்பர் வசதி.. இனி பயணிகளுக்கு குஷி தான்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக பயணிகளே தங்கள் உடைமைகளை தானியங்கி எந்திரம் மூலம் சோதனை செய்துவிட்டு விமானத்தில் ஏற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வசதி காரணமாக சோதனை என்ற பெயரில் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.
இந்தியாவின் மிகவும் முக்கியமான விமானங்களில் ஒன்று சென்னை விமான நிலையம்.. சென்னையில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியா முழுவதுக்கும் இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று.

சென்னை உள்நாடு விமான நிலையத்தின் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு அதி நவீன கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து பயணிகள் தங்கள் உடைமைகளை, பாதுகாப்பு சோதனைகள் நடத்தி, விமானத்தில் ஏற்றுவதற்கு இனி நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை..
அங்கு அமைக்கப்பட்டுள்ள தானியங்கி எந்திரங்கள் மூலம் தங்கள் உடைமைகளை பயணிகளே ஸ்கேன் செய்து பரிசோதித்து கன்வேயர் பெல்ட் மூலம் விமானங்களில் ஏற்றுவதற்கு 'செல்ப் பேக்கேஜ் டிராப்' (எஸ்.பி.டி.) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது. 'பாஸ்ட் டிராக்' எனப்படும் இந்த புதிய நவீன முறை சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது
இந்த வசதி உள்நாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் பாதுகாப்பு சோதனை கவுண்ட்டர்கள் 60-ல் இருந்து 63 வரையில் தானியங்கி சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சோதனை கவுண்டரை பொறுத்தவரை ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்திரங்கள் மட்டும் இருக்கும். இதில் பயணிகள் நேரடியாக வந்து தங்களது உடைமைகளை வைத்து விட்டு, தங்களின் பயண டிக்கெட், பி.என்.ஆர். எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
உடனடியாக தானியங்கி முறையில் அவர்களுக்கு போர்டிங் பாஸ் வரும். பயணி அந்த போர்டிங் பாஸை எடுத்து, அங்குள்ள மற்றொரு எந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். உடனடியாக அந்த உடைமைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள் எந்திரத்தின் திரையில் தெரியும்.
அதை பார்த்த பின்னர், விமானத்தில் செல்ல போகும் பயணி அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன்கள் மூலம் ஓகே கொடுக்க வேண்டும். அதோடு தான் எடுத்துச் செல்லும் உடைமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பயணிகள் உடைமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள், எந்திரத்தில் இருந்து வரும். பயணி அந்த டேக்குகளை எடுத்து தங்கள் உடைமைகளில் ஒட்டுவதோடு, அதன்பின்பு உடைமைகளை அருகே உள்ள கன்வேயர் பெல்டில் வைத்துவிட்டால், பயணியின் உடைமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு தானாகவே கொண்டு செல்லப்படும்.
இந்த 'பாஸ்ட் டிராக்' முறை காரணமாக இனி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. பயணிகள் காத்திருக்காமல் இனி எளிதாக விமானங்களில் ஏற முடியும்.
டெர்மினல் ஒன்றில் இருந்து புறப்படக்கூடிய இண்டிகோ விமான பயணிகளுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த முறை விரைவில் மற்ற விமான நிறுவன பயணிகளுக்கும் செயல்பாட்டுக்கு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications