வேற லெவல் மூவ்.. இரண்டே நாளில் எடப்பாடியார் வெளியிட்ட செம்ம அறிவிப்புகள்!
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு நாளில் மட்டும் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கூட்டுறவு கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து, ராஜா முத்தையா கல்லூரியில் மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளைப் போல் கட்டணம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு என இரண்டு நாளில் பல அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடியார் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் கூட முழுமையாக இல்லை. அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார். எதிர்க்கட்சியான திமுக கூட்டணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார்.
அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுவதாக ஒரே நாளில் அறிவித்து அதிர வைத்தார்
ஓய்வு வயது
அடுத்ததாக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளார். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. அரசு ஊழியர்களுக்காக அறிவித்த மேலே சொன்ன இரண்டு அறிவிப்புகளும் அரசு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கூட்டுறவு கடன் ரத்து
இந்நிலையில் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வங்கி சுமார் 12000 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்த விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
வழக்குகள் ரத்து
இதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றுள்ளார் காவலர்களை தாக்கிய வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்றும் வாகனங்களுக்கு தீ வைத்த வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாகவும் கூறி முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சிதம்பரம் மருத்துவக்கல்லூரி
இதேபோல் சிதம்பரம் ராஜா முத்தைய மருத்துவக்கல்லூரியில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போலவே கட்டணம் வசூலிக்கப்படும் என்று நேற்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்புகளையும் தவிடுபொடியாக்கி உள்ளார் முதல்வர் எடப்பாடியார்.