பொன்முடி வீட்டுக்கு வந்த ஸ்விக்கி ஊழியர்.. போங்கப்பா! இங்க என்ன நடக்குதுனு தெரியாம.. விரட்டிய போலீஸ்
சென்னை: தம்பி போங்கப்பா, இங்க என்ன நடக்குது தெரியுமா என அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வந்த ஸ்விக்கி ஊழியரிடம் போலீஸார் கேள்வி எழுப்பினர்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நேற்று காலை 7.30 மணிக்கு அமலாக்கத் துறை சோதனை தொடங்கியது. இது சுமார் 13 மணி நேரம் நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

அவருடைய மகன் கவுதம சிகாமணியின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. சென்னை சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடந்தது. விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் இந்த சோதனை நடந்தது.
துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி இல்லத்திற்கு வந்த தடயவியல் துறை நிபுணர்கள், ஆவணங்கள் ஏதேனும் அழிக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது, அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சத்தை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தப் பணம் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை கேள்வி எழுப்பிய நிலையில் அதற்குரிய விளக்கத்தை அவர் கூறவில்லை என தெரிகிறது. இதையடுத்து அந்த பணத்தை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நள்ளிரவு பொன்முடியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த ரெய்டு குறித்து தகவலறிந்த தொண்டர்கள் பொன்முடியின் வீட்டை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அப்போது அங்கு ஸ்விக்கி நிறுவன ஊழியர் ஒருவர் ஒரு பிரபல நிறுவனத்தின் உணவு பார்சலுடன வந்தார்.
இந்த நிறுவனம் விதவிதமான ஐஸ்கிரீம்கள், டெசர்ட்கள், பிரவுனிக்கள், கேக்குகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது. அந்த நிறுவனத்தின் பாக்கெட்டுடன் வந்த ஸ்விக்கி ஊழியர் பொன்முடி வீட்டு கேட் அருகே வந்தார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் என்னப்பா வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்த வீட்டிலிருந்து ஆர்டர் செய்திருந்தார்கள் சார். அதனால் டெலிவரிக்கு வந்தேன் என கூறியுள்ளார். உடனே போலீஸ்காரர் போங்கப்பா, இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு என தெரிவித்தார். இதையடுத்து அந்த ஊழியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications