என் அம்மா இதை பார்த்துக்கிட்டு இருப்பாங்க.. பிரிவு உபச்சார விழாவில் கண் கலங்கி நின்ற சைலேந்திர பாபு!
சென்னை: காவல்துறை டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு, தனக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் கண் கலங்கி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிவந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றாறார். பணிஓய்வு பெறுவதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், சமூகப் பணிகளை தொடர்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தனது 25ஆவது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழ்நாட்டில் காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சைலேந்திர பாபு, 36 ஆண்டு காலமாக தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார். சைலேந்திரபாபுவுக்கு காவல்துறை உயரதிகாரிகள் சார்பில் 'ரோப் புல்லிங்' மரியாதை செலுத்தப்பட்டு பிரியாவிடை கொடுக்கப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் சைலேந்திர பாபுவை அமர வைத்து, அந்த காரை வடம்பிடித்து இழுத்து வழியனுப்பி வைத்தனர். காவல்துறை டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு ரோப் புல்லிங் மரியாதை செய்வது மரபு. ஓய்வுபெறும் காவல்துறை டிஜிபியை காரில் அமர வைத்து அவருக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் கயிற்றை கட்டி இழுத்து வருவதுதான் ரோப் புல்லிங் மரியாதை.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு மிகவும் உருக்கமாகப் பேசினார். 96 வயது நிரம்பிய தனது தாய் தற்போது தான் பேசிக் கொண்டிருப்பதை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார் என்று கூறி, அவருக்கு இந்நேரத்தில் நான் சல்யூட் செய்ய விரும்புகிறேன் என்று கூறி கண்கலங்கி நின்றார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சூடுகளோ, பெரிய அளவில் கலவரங்களோ இல்லை என்றும், போதைப் பொருள் ஒழிப்பு பணிகளில் தமிழ்நாடு போலீசார் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்கள் என்றும், வரலாற்றில் முதன் முறையாக கஞ்சா வியாபாரிகள் மீது பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு காவல்துறை அதிகாரியாக தான் செயல்பட்ட போது தனது உயிரை பல முறை காப்பாற்றிய தன் சக அதிகாரிகளுக்கு தன்னுடைய நன்றிகளை உரித்தாக்குவதாக சைலேந்திரபாபு கூறினார். தமிழ்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்பு படையில் தான் பணியாற்றியபோது, அதில் தன்னோடு பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
தனது கடமையை நன்றாக முடித்து விட்டதாகவும், நன்றி உணர்வு மேலோங்கி நிற்கிறது என்றும் குறிப்பிட்ட அவர், தனக்கு உறுதுணையாக இருக்கும் தனது நண்பர்கள், மனைவி சோபியா, குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கண்ணீர் மல்க பேசினார்.
மேலும், 96 வயது நிரம்பிய தனது தாய் தற்போது தான் பேசிக் கொண்டிருப்பதை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார் என்று கூறி, அவருக்கு இந்நேரத்தில் நான் சல்யூட் செய்ய விரும்புகிறேன் என்று சல்யூட் அடித்து கண்ணீர் மல்க விடை பெற்றார் சைலேந்திரபாபு.












Click it and Unblock the Notifications