தாம்பரம்- சென்னை கடற்கரை ரயிலில் பயணிக்க திட்டமா.. இன்று முதல் ரத்தாமே! ஏன் என்னாச்சு?
சென்னை: தாம்பரம்- சென்னை கடற்கரை வரையிலான இரவு நேரத்தில் இயங்கும் புகர் மின்சார ரயில்கள் இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: எழும்பூர்- விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் பணிமனையில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

இதனால் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு இயங்கும் புகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். அந்த வகையில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் மறுமார்க்கமாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அது போல் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் மறுமார்க்கமாக இரவு 11.35 மணிக்கு தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் 2 மணி வரை அரக்கோணம் வழித்தடத்தில் செல்லும் புகர் மின்சார ரயில்கள் புட்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications