தமிழ்நாட்டில் தொடங்கும் SIR.. வழக்கு தொடுக்க முடிவு.. அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலுவான முடிவு
சென்னை: S.I.R. நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட கண்டனத்தில், பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) இணைந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளைப் பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதிமுகவும் பாஜகவும் மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவின்றி, வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் நோக்குடன் செயல்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இவர்களின் இந்த கணக்கு தவறாகப் போகும் என்று ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்தார்.
அனைத்து கட்சி கூட்டம்
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் உள்ள மக்களை குறிவைத்து, "சதி" நடப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. தமிழக மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் முயற்சி இது என்று விமர்சித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஒன்று அந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அறிவித்து நடத்தியதிலிருந்தே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இந்த திருத்தப் பணி நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
SIR திருத்தம் தமிழ்நாடு
தேர்தல் ஆணையம், எதிர்கட்சி ஆளும் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் "சிறப்பு தீவிர திருத்தப் பணி" (SIR) நடத்தப்படும் என்று அறிவித்ததை அடுத்து, திமுக தலைமையிலான தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், பண்டிகை விடுமுறைகள் நெருங்குவதாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியை ஒத்திவைக்க வேண்டும் என ஆளும் திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அண்மையில் திமுக முன்வைத்தது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அளிக்கப்பட்ட மனுவில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பொதுமக்கள் பங்கேற்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் இந்தப் பணியானது, வடகிழக்கு பருவமழையின் உச்சக்காலத்தில் வருவதால் கனமழையும் மோசமான வானிலையும் நிலவும் என அஞ்சப்படுகிறது.
திமுகவின் ஆர்.எஸ். பாரதி மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்த சிரமங்களை விளக்கினர். "தமிழக வாக்காளர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்பதால், படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து திரும்ப அளிப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்காது. இந்தச் செயல்பாட்டில் பெருமளவிலான வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது," என்று திமுக குறிப்பிட்டது.
தீர்மானம்
இந்த நிலையில்தான் S.I.R. நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications