திண்டுக்கல்லுக்கு லட்டு போல் அறிவிப்பு..தூத்துக்குடி, தஞ்சைக்கும் தான்! தமிழக பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 2025-2026ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உயர் கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல், சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

நாளை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சொன்னது போல பல முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. எல்லார்க்கும் எல்லாம் என்ற முழக்கத்தோடு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் கூறி தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் உயர்கல்வித் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்," கனவுகளின் சிகரமாய் விளங்கிடும் அண்ணா பல்கலைக்கழகத்தினை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களின் தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளும், உலக அளவிலான QS தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள்ளும் இடம்பெறச் செய்திட உரிய செயல்திட்டம் வகுக்கப்படும்.
உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை பொருத்தவரை நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. அந்த சாதனை அளவை மேலும் உயர்த்திடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியினை தொடர்ந்து வழங்கிட இந்த அரசு பல முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் திறன்மிகு வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், மின் பதிப்புகள் கொண்ட நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற உட்கட்டமைகள் 300 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.
பொறியியல் வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு கடந்த 2021-2022 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் போக்குவரத்து கட்டணம் என அவர்களை மொத்த கல்விச்செலவையும் முழுமையாக அரசே ஏற்று கொள்கிறது. இத்திட்டத்திற்கு பல்வேறு தொழிற் படிப்புகளில் தற்போது பயின்று வரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றிடும் வகையில் வரும் நிதியாண்டுக்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களால் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர் கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications