உதயநிதி துறைக்காக களமிறக்கப்படும்.. "டாப் ஐஏஎஸ் அதிகாரி".. ஸ்டாலின் எடுத்த முடிவு! மாறும் அமைச்சரவை?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க போகும் அமைச்சரவைக்கு செயலாளராக மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்ற செய்திகள் மீண்டும் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தீவிரம் அடைந்துள்ளன. இந்த முறை உறுதியாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று கோட்டை தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்கள் இந்த வருட தொடக்கத்தில் தீவிரமாக இருந்தன. அதன்பின் கடந்த மே மாதம் திமுகவின் ஒரு வருட ஆட்சி முடிந்ததும், அந்த பேச்சுக்கள் மீண்டும் தீவிரம் அடைந்தன.

அடங்கிய பேச்சுக்கள்
கடந்த 2 -3 மாதங்களாக தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக வட்டமடித்த செய்தி என்றால் அது அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திதான். அமைச்சரவையில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட போவதாக செய்திகள் வட்டமடித்தன. ஆனால் திடீரென இந்த செய்திகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அடங்கியே போனது. திடீரென அரசு தரப்பில் பெரிதாக யாரும் அமைச்சரவை மாற்றங்கள் பற்றி பேசவில்லை. முன்னதாக அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்திகளில் பலரின் துறைகள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வந்தன. முக்கியமாக மூத்த - செயல்படாத அமைச்சர்கள் சிலரின் (2 பேரின்) பதவி பறிக்கப்படலாம் என்று செய்திகள் வேகமாக பரவின.

மாற்றம்
முக்கியமாக அமைச்சர் பிடிஆர், சேகர் பாபு, அன்பில் மகேஷ், ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால் அவர்களின் துறைகள் மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. அதே சமயம் ஐ பெரியசாமி உள்ளிட்டோர் வேறு துறைகளை எதிர்பார்ப்பதால் அவர்களுக்கு வேறு துறைகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டது. இது போக அமைச்சரவையில் இளம் எம்எல்ஏக்கள் சிலர் சேர்க்கப்பட்டு அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

பிறந்தநாள்
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இது தொடர்பான வாதங்கள் அதிகரித்தன. அன்பில் மகேஷ் தொடங்கி மா சுப்பிரமணியம் வரை பல்வேறு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தீவிரமாக குரல் கொடுத்து வந்தனர். தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது காய்ச்சலும், முதுகுவலி பிரச்சனையும் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் உதயநிதியை அமைச்சரவை உள்ளே கொண்டு வர ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஸ்டாலின் அப்செட்டில் இருக்கும் சீனியர், ஜூனியர் உட்பட 6 அமைச்சர்களில் சிலரின் துறையை பறிக்கலாம். சிலரை துறையை மாற்றலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறாராம்.

மாற்றம்
முன்னதாக இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன். நான் அமைச்சராக போவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருடமாகவே இந்த பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் முதல்வர்தான் அதை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூலாக சொல்லி இருக்கிறார். இந்த நிலையில்தான் அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க போகும் துறைக்கு, பெரும்பாலும் விளையாட்டு துறைக்கு செயலாளரை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறதாம்.

செயலாளர்
இந்த துறைக்கு அனுபவம் வாய்ந்த செயலாளரை நியமனம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறாராம். இளம் அரசியல்வாதியுடன் செயல்பட கூடிய, அதே சமயம் நன்றாக ஆலோசனை செய்ய கூடிய நபரை முதல்வர் ஸ்டாலின் நியமிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். தற்போது சென்னை மாநகர ஆணையராக இருக்கும் ககன் தீப் சிங் பேடி.. சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதோடு மேயர் பிரியாவிற்கு சிறப்பாக வழிகாட்டி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகும் பட்சத்தில் அவரின் துறைக்கு ககன் தீப் சிங் பேடியை நியமனம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications