குட்கா, பான் மசாலா.. புகையிலை பொருட்களுக்கான தடை - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு! தமிழக அரசு உத்தரவு
சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி, குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கான தடை மே 23, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் படி, 2013 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி முதல் புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடையானது, 2025 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பு காலாவதியாகி விட்ட நிலையில் மீண்டும் தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிக்கோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது தொடரும்.
குட்கா, பான் மசாலாவை ஒழிக்க தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications